இதுக்கு முடிவு கிடையாதா சார்! ஆசியாவில் அதிகரிக்கும் கொரோனா! உலக சுகாதார மையம் எச்சரிக்கை!
ஜெனீவா: ‛‛கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடியவில்லை. ஆசியாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்'' என உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் 2019 இறுதியில் கொரோனா பரவல் துவங்கியது. இது உலகம் முழுவதும் பரவி ஊரடங்குக்கு வழிவகுத்தது. தொடர்ந்து உருமாறிய கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் பொதுமக்களை தாக்கியது.
இதனால் இந்தியா உள்பட பல நாடுகளில் பல லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 3 அலையாக கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 4வது அலை ஜூன் மாதம் துவங்கி 4 மாதம் பாதிப்பை ஏற்படுத்தும் என ஐஐடி கான்பூர் கணித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
இதை உறுதி செய்யும் வகையில் ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது:

பாதிப்பு அதிகரிப்பு
உலகில் சில வாரங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. முழுவதுமாக பரவல் முடியவில்லை. தற்போது மீண்டும் வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. சில நாடுகளில் பரிசோதனை குறைவாக உள்ளபோதும் நோய் உறுதி செய்யும் தன்மை அதிகரித்துள்ளது.

8 சதவீதம் உயர்வு
கடந்த 7 நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது 8 சதவீதம் அதிகமாகும். மேற்கு பசிபிக் நாடுகளில் 29 சதவீதம், ஆப்பிரிக்காவில் 12 சதவீதம், ஐரோப்பாவில் 2 சதவீதம் வரை பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இருப்பினும் பலி எண்ணிக்கை 43 ஆயிரமாக உள்ளது. பலி எண்ணிக்கை 17 சதவீதம் வரை குறைந்துள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம். ஆனாலும் அலட்சியம் காட்டக்கூடாது.

தடுப்பு நடவடிக்கை கட்டாயம்
வரும் நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தால் இறப்புகளும் கூடும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதனால் கவனமாக இருக்க வேண்டும். தற்போதைய சூழலில் கொரோனாவை எதிர்த்து போராடுவதில் தடுப்பூசி முக்கிய பங்காற்றுகிறது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனை செய்தல், நோய் பாதித்தவர்களை ஆரம்பத்திலேயே கவனித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை அனைத்து நாடுகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆசியாவில் எங்கு அதிகரிப்பு
இவரது கூற்றுப்படி சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பாக நேற்று 5,280 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். மேலும் கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவிலும் நேற்று ஒரேநாளில் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. இதேபோல் வியட்நாமிலும் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தான் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications