சிறையில் 22 ஆண்டுகள்.. இஸ்ரேல் செய்த "அந்த" தவறு! இப்போ தலைவலியாக மாறிய சின்வார்! யார் இவர்! பின்னணி
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் போர் ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்படும் பேரழிவுக்குச் சொந்தக்காரர் என்று அழைக்கப்படும் யாஹ்யா சின்வார் குறித்தும் நாம் இதில் பார்க்கலாம்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படை யாருமே எதிர்பார்க்காத வகையில் தாக்குதலை நடத்திய நிலையில், அங்கே யுத்தம் ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்கிறது. ஹமாஸ் படை நடத்திய இந்தத் தாக்குதலுக்கு யாஹ்யா சின்வார் என்பவரே மூளையாகச் செயல்பட்டுள்ளார்.

இவர் இஸ்ரேல் அதிகாரிகள் பேரழிவின் முகம் என்றே குறிப்பிடுகிறார்கள். அதேநேரம் பாலஸ்தீன ஆதரவாளர்கள் இவருக்கு ஆதரவாகக் கருத்துகளைக் கூறி வருகின்றர். யார் இந்த யாஹ்யா சின்வார். ஹமாஸ் படைக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
யார் இவர்: அப்போது எகிப்து கட்டுப்பாட்டில் இருந்து தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் 1962இல் பிறந்தவர் இந்த சின்வார். இவர் தனது இளமைக் காலத்தை கான் யூனிஸ் நகரிலேயே கழித்தார். இவரை இஸ்ரேல் படைகள் கான் யூனிஸ் நகரின் கொலைகாரர் என்றே குறிப்பிடுகிறார்கள். சின்வாரின் குடும்பம் தற்போது தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்கெலோன் நகரில் இருந்துள்ளனர். அஷ்கெலோன் நகரம் இஸ்ரேல் வசம் சென்ற நிலையில், 1948இல் அவர்கள் காசாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது.
சின்வார் மற்ற பாலஸ்தீன தலைவர்களைப் போலவே அங்குள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் படித்தார். அரபு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர். சின்வார் மொத்தம் 24 ஆண்டுகள் இஸ்ரேல் சிறைகளில் கழித்துள்ளார். அவர் முதலில் 1982இல் அவர் வன்முறை செயல்களில் ஈடுபட்டதாகக் கைதானார். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், வெளியே வந்து பாலஸ்தீனிய இயக்கத்திற்குள் இருக்கும் இஸ்ரேலின் உளவாளிகளைக் குறிவைக்கும் ஒரு பிரிவை அவர் சலா ஷெஹாடே என்பவருடன் இணைந்து உருவாக்கினார்.
இஸ்ரேல் செய்த தவறு: 1988இல் இரண்டு இஸ்ரேல் வீரர்கள் மற்றும் நான்கு பாலஸ்தீனியர்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2006இல் ஹமாஸ் இஸ்ரேலுக்கு வந்து தாக்குதல் நடத்தியது. அப்போது ஹமாஸ் படை கிலாட் ஷாலித் என்ற பிணையக் கைதியைப் பிடித்துச் சென்றது. அவரை விடுவிக்க இஸ்ரேல் 1027 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டி இருந்தது. அப்போது விடுவிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் தான் இந்த சின்வார்
இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுதலையான உடன் ஹமாஸ் படையில் அவர் முக்கிய இடத்திற்கு உயர்ந்தார். குறிப்பாக ஹமாஸ் ராணுவத்தில் அவரது செல்வாக்கு அதிகரித்தது. கடந்த 2015இல் அவரை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது. ஹமாஸ் படையின் ராணுவத்தை உருவாக்கியதில் சின்வாரின் பங்கு முக்கியமானது என்று அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.
செல்வாக்கு அதிகம்: ஹமாஸ் அமைப்பில் அரசியல் பிரிவுக்கு இஸ்மாயில் ஹனியே தலைவராக உள்ள நிலையில், அவருக்கு அடுத்து அதிகார மிக்க இடத்தில் சின்வார் இருக்கிறார். இருப்பினும், காசாவில் இவரது செல்வாக்கு தான் அதிகம் எனக் கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தைத் தீவிரமாக ஆதரிக்கும் இவருக்கு, ஹமாஸ் படையில் செல்வாக்கு அதிகம். ஹமாஸ் பயங்கரவாத படையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க இவர் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
கடந்த வாரம் இஸ்ரேல் மீது நடந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் இந்த யாஹ்யா சின்வார் தான். இவரை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பேரழிவின் கோர முகம் எனக் குறிப்பிடுகிறார். இஸ்ரேலுடன் அமைதியை ஏற்படுத்த முயன்ற அனைவரையும் கொன்ற இந்த நிலைக்கு உயர்ந்தவர் யாஹ்யா சின்வார் என்றும் இஸ்ரேல் ராணுவம் குற்றஞ்சாட்டுகிறது. இப்படி 24 ஆண்டுகள் இஸ்ரேல் சிறையில் இருந்த இவர் தான், இப்போது இஸ்ரேலுக்கே தலைவலியாக மாறியுள்ளார்.












Click it and Unblock the Notifications