'கொரோனா சுனாமி..'டெல்டா + ஓமிக்ரான் சேர்ந்து ஏற்படுத்தும் பேராபத்து.. WHO எச்சரிக்கைக்கு என்ன காரணம்
ஜெனீவா: ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை தினசரி மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வேக்சின் பணிகளால் கடந்த சில மாதங்களாக உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தது. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றப்போட்டது.
ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகளிலும் தினசரி கொரோனா பாதிப்பு படுவேகமாக அதிகரித்து வருகிறது.

ஓமிக்ரான் வைரஸ்
உலகின் பல்வேறு நாடுகளிலும் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் மீண்டும் லட்சக் கணக்கில் வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. ஓமிக்ரான் பெரியளவில் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும் கூட அதிகப்படியான பேர் மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் போது அது சுகாதார கட்டமைப்பில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும்.

பல மடங்கு அதிகரிப்பு
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், "டெல்டா மற்றும் ஓமிக்ரான் உருமாறிய கொரோனா வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தல்களாக மாறியுள்ளது. இது புதிய கேஸ்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கின்றன.

கொரோனா சுனாமி
கடந்த ஒரு வாரத்தில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 11 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஓமிக்ரான் மின்னல் வேகத்தில் பரவக்கூடியது. டெல்டா கொரோனாவே இன்னும் முழுமையாகக் கட்டுப்படாத நிலையில், இப்போது ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கொரோனா பாதிப்பின் சுனாமியை ஏற்படுத்துகிறது. இது ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் சுகாதார கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யக்கூடும். ஏற்கனவே அதிகப்படியான சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

என்ன காரணம்
இந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்கு எதிராக உலக நாடுகள் பெரும் போராட்டம் நடத்தின. அடுத்த ஆண்டு வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வரத் தொடங்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் அனைத்து நாடுகளுக்கும் வேக்சின் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும். தடுப்பூசி சமத்துவத்தில் தான் வைரஸ் எவ்வளவு சீக்கிரம் ஒழிக்கப்படும் என்பது அடங்கியுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாட்டிலும் உள்ள மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாகத் தடுப்பூசி போட வேண்டும்.
Recommended Video

நமது இலக்கு
அடுத்தாண்டு நடுப்பகுதியில் இந்த கவரேஜ் 70 சதவீதமாக உயர வேண்டும். 194 நாடுகளில் 92 நாடுகள் இந்த 40 சதவீத இலக்கை கூட அடைய முடியாது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்குக் குறைந்த அளவு வேக்சின் மட்டுமே கிடைக்கிறது. அப்படிக் கிடைக்கும் வேக்சின் கூட காலாவதியாகும் தேதிக்கு அருகில் உள்ளது. மேலும், சிரிஞ்ச்கள் போன்ற முக்கிய பாகங்கள் இல்லாமல் வேக்சின் வருகிறது..

இது தான் காரணம்
இது உலக நாடுகளுக்கு ஓர் அவமானம் மட்டுமல்ல, இது உயிர்களைப் பறிக்கிறது. கொரோனா வைரஸ் தடையின்றி பரவி, தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. அடுத்த ஆண்டிலாவது வேக்சின் சமத்துவம் இருக்க வேண்டும் என்பதை உலக நாட்டுத் தலைவர்களுக்கு நான் வலியுறுத்துகிறேன். 2022இன் நடுப்பகுதிக்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தது 70 சதவிகித பேருக்கு வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை. நாம் புத்தாண்டு உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பணக்கார நாடுகள்
உலகின் பணக்கார நாடுகள் வைரசை எதிர்த்துப் போராடத் தேவையான ஆயுதங்களான மாஸ்க், சிகிச்சை கருவிகள், நோயறிதல் கருவிகள் மற்றும் வேக்சின் போன்றவற்றைப் பதுக்கி வைத்துக் கொள்கின்றன. இது அடுத்தடுத்த புதிய வகை கொரோனா உருவாகக் காரணமாகி பேரபாயத்திற்கு வழிவகை செய்கிறது. நாம் இப்போது மற்றொரு மாபெரும் பிரச்சினையை எதிர்கொள்ளத் தொடங்கி இருக்கிறோம். அது தான் போலி செய்திகள்.

வேக்சின் பணிகள்
இது வேக்சின் பணிகளை கடுமையாகப் பாதிக்கின்றன. ஐரோப்பா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு திடீரென பல மடங்கு அதிகரித்துள்ளது. வேக்சின் போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். இதன் காரணமாகவே தற்போது கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் சுமார் 18 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 35 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications