கணவனை உதறிய மனைவி.. தாத்தாவுக்கு பெருங் கோபம்.. திடீர்னு மைதானத்தில் நுழைந்த கார்.. நிலைகுலைந்த சீனா
பெய்ஜிங்: அடுத்தடுத்து சீனாவில் நடந்துள்ள பகீர் சம்பவம், அம்மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.. 62 வயது முதியவர் செய்த காரியத்தினால், பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. உடற்பயிற்சி மைதானத்தில் என்ன நடந்தது?
2 நாட்களுக்கு முன்புதான், சீனாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. வடகிழக்கு சீனாவில் ஜிலின் மாகாணத்தில் வசித்து வருபவர் ஜியோஜூன்.. ஏழை குடும்பத்தை சேர்ந்த இவரது அப்பா, கட்டுமான நிறுவனத்திலும், இவரது அம்மா அங்குள்ள நீச்சல் குளத்திலும் வேலை செய்து வருகிறார்கள். எனவே, குறுக்கு வழியில் பணக்காரனாக வேண்டும் என்று ஜியோஜூன் ஆசைப்பட்டார்..

ஆடம்பர பொருட்கள்: இதற்காக பணக்கார குடும்பத்தின் வாரிசு என்று தன்னை அழைத்து கொண்டு, போலியான ஆடம்பர வாழ்க்கையை வாழ துவங்கினார்.
இவரது பொய்யை நம்பிய இளம்பெண் ஒருவருக்கு ஆன்லைனில் போலியான ஆடம்பரப் பொருட்களை வாங்கி தந்து அந்தபெண்ணை காதலிக்கவும் ஆரம்பித்தார். காதலிக்கும் போதே கருவுற்ற நிலையில், ஜியோஜூனை அந்தபெண் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நாளடைவில் கணவரின் வண்டவாளம் தெரிந்து அவரை வீட்டை விட்டே துரத்திவிட்டார்.
பிறகு ஆன்லைன் கேம் மூலம் ஜிங்ஓஹோங் என்ற பெண்ணிடம் பழகி, அவரையும் கர்ப்பமாக்கினார்.. 140,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம்) அவரிடமிருந்து பெற்று, அந்த பெண்ணையும் ஏமாற்றிவிட்டார்.
கர்ப்பம்: இதேபோல, மேலும் 3 கல்லூரி மாணவிகளை காதலித்து ஏமாற்றியுள்ளார்.. அதில் ஒரு பெண் கர்ப்பமடைந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவர்கள் 4 பேருமே ஒரே அப்பார்ட்மென்ட்டில் தான் வசித்து வந்திருக்கிறார்கள். இறுதியில், 4 பேரில் ஒரு பெண்ணுக்கு, ஜியோஜூன் மீது சந்தேகம் ஏற்பட்டு, போலீஸ் ஸ்டேஷன் வரை விவகாரம் சென்றுள்ளது. அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் தான், இவரது குட்டு வெளிப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பரபரப்பு முடிவதற்குள்ளேயே, இன்னொரு சம்பவம் நடந்து பரபரப்பை தந்து வருகிறது. சீனாவில் உள்ள ஷுஹாய் நகரத்தில் புகழ்பெற்ற விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில், மாலை நேரத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் உடற்பயிற்சி செய்வது வழக்கமாகும்.
திடீரென மோதியது: அந்தவகையில், கடந்த திங்கட்கிழமை மாலை, ஏராளமானோர் மைதானத்தில் திரண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது, இரவு 8 மணியளவில் திடீரென கார் ஒன்று மைதானத்தில் புகுந்தது.. அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது தாறுமாறாக மோதியது.
இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.. 43 பேர் படுகாயமடைந்தனர்.. காயமடைந்த அனைவருமே மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்குமே தீவிர சிகிச்சை நடந்து வருவதாக கூறப்படுகிறது...
விபத்து சம்பவம்: போலீசார் இதனை விசாரித்தபோது, முதலில் விபத்து என்றே நினைத்தனர்.. ஆனால், 62 வயது முதியவர், இப்படியொரு சம்பவத்தை வேண்டுமென்றே செய்திருப்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது.. விபத்தை ஏற்படுத்திய அந்த முதியவரும் இப்போது சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கோர சம்பவம் தொடர்பாக போலீசாரும் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட கோபத்தில், 62 வயது தாத்தா இந்த காரியத்தை செய்திருப்பது தெரியவந்தது..
மனைவி: கருத்துவேறுபாடு காரணமாக, மனைவியுடன் தாத்தாவுக்கு விவாகரத்து ஏற்பட்டுள்ளது.. இதனால் ஏற்கனவே விரக்தியில் இருந்து வந்துள்ளார்.. மேலும், சொத்துக்களை பகிர்வது தொடர்பாகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில், பொதுமக்கள் மீது காரை விட்டு ஏற்றி 35 பேரை கொன்றுள்ளது தெரியவந்துள்ளது. தாத்தாவுக்கு நினைவு திரும்பினால்தான், இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. இந்த சம்பவம் சீனாவை நிலைகுலைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications