கட்டாய திருமணம், செக்ஸ்: ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய சிறுமிகள் கதறல்
கான்கே: ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்து வந்த 5 சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கும், பிற பெண்களுக்கும் நேர்ந்த கொடுமைகள் பற்றி தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் உள்ள சிங்ஜர் பகுதியில் யசிதி மக்கள் வாழும் கிராமங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தாக்கினர். இதனால் ஆயிரக்கணக்கான யசிதி மக்கள் அருகில் உள்ள மலைகளுக்கு தப்பியோடிவிட்டனர்.
தீவிரவாதிகள் 5 ஆயிரம் யசிதி மக்களை கடத்திச் சென்றனர். அதில் பலர் பெண்கள் மற்றும் சிறுமிகள். இந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து 5 சிறுமிகள் மற்றும் பெண்கள் தப்பி வந்துள்ளனர்.
அதில் 15 வயது சிறுமி ஒருவர் கூறுகையில்,
கடத்தல்
நான் என் பெற்றோர், 5 சகோதரிகள் மற்றும் சகோதரியின் மகளுடன் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது தீவிரவாதிகள் எங்களின் காரை வழிமறித்து எங்களை கடத்திச் சென்று நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். அங்கு அவர்கள் ஆண்கள் மற்றும் சிறுவர்களிடம் இருந்து பெண்களை பிரித்தனர். பின்னர் திருமணமாகாத பெண்கள் மற்றும் வயதானவர்களை பிரித்து அழைத்துச் சென்றனர்.
துப்பாக்கி
நான் போக மறுத்து என் தாயின் கையை பிடித்து அழுதேன். தீவிரவாதிகள் என்னை அடித்து என் தலையில் துப்பாக்கியை வைத்தனர். இதை பார்த்த என் தாய் அவர்களுடன் செல் இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவார்கள் என்றார். அவர்கள் என்னை, என் 19 வயது அக்கா மற்றும் 12 சிறுமிகளுடன் சேர்த்து 3 பேருந்துகளில் ஏற்றி மொசுல் நகருக்கு கொண்டு சென்றனர்.
மொசுல்
மொசுல் நகரில் ஒரு வீட்டில் நாங்கள் 9 நாட்கள் இருந்தோம். தீவிரவாதிகள் வந்து அவர்களுக்கு பிடித்த பெண்ணை, சிறுமியை தேர்வு செய்வார்கள். உயர் பதவியில் இருக்கும் தீவிரவாதி என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை தேர்வு செய்து அழைத்துச் செல்வார்கள்.
தீவிரவாதி
ஒரு தாடி வைத்த தீவிரவாதி வந்து என்னை அழைத்தான். நான் வர மறுத்ததும் என் அக்காவின் கழுத்தில் கத்தியை வைத்தனர். அதனால் சென்றேன். அது தான் என் சகோதரிகளை நான் கடைசியாக பார்த்தது.
சிரியா
என்னை 8 இடங்களுக்கு மாற்றி பின்னர் சிரியாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிரவாதிகள் பெண்களை ஏலத்தில் எடுத்தனர். அங்கு உள்ள ஒரு வெள்ளை வீட்டில் எங்களை தங்க வைத்தனர். அந்த வீட்டில் பெண்களை ஆடைகளை அவிழ்த்துவிட்டு குளிக்கச் செய்து அவர்கள் அளித்த உடையை அணிய வைத்தனர்.
திருமணம்
வார இறுதியில் எங்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ளப்போவதாக தீவிரவாதிகள் தெரிவித்தனர். அடுத்த அறையில் இருந்த பெண்களை செக்ஸுக்காக அவ்வப்போது இழுத்துச் சென்றனர். பல தீவிரவாதிகளால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் அது பற்றி எங்களிடம் தெரிவித்தனர்.
தப்பித்து ஓடி
நானும் சிலரும் தப்பித்து ஓடினோம். ஆனால் எங்களை பிடித்து வந்து அடைத்து வைத்துவிட்டனர். கட்டாய திருமணம் செய்ய நான் தயாராக இல்லை. இதையடுத்து மீண்டும் தப்பிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றேன் என்றார்.