ஊரக உள்ளாட்சி தேர்தல்: தலைவர் பதவிகளை கொத்தாக கைப்பற்றிய திமுக - தீபாவளி கொண்டாடிய திமுகவினர்
காஞ்சிபுரம்: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சியில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை திமுக கூட்டணிகளே கைப்பற்றின. திமுக தொண்டர்கள் தீபாவளிக்கு முன்னதாகவே பட்டாசுகளை வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றன.
தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்து கடந்த 12ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில்வெற்றி பெற்றவர்கள் கடந்த20ஆம் தேதி நடைபெற்ற முதல்கூட்டத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.
9 மாவட்ட உள்ளாட்சி தலைவர் பதவி மறைமுக தேர்தல்.. பெரும்பாலான பதவிகளை மொத்தமாக அள்ளிய திமுக!

தேர்தல் வெற்றி
மாவட்ட ஊராட்சி மற்றும்ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றுக்கான தலைவர்கள், துணைத் தலைவர்கள், கிராம ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நேற்று நடைபெற்றது. இதில் போட்டி இல்லாத இடங்களில் தலைவர், துணைத் தலைவர்கள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டனர்.

வெற்றி கொண்டாட்டம்
இருவர் போட்டியிடும் இடங்களில் தேர்தல் நடத்தி, அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 2 வேட்பாளர்களும் சமமான வாக்குகள் பெற்ற இடங்களில், இருவரது பெயரையும் எழுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது.

கோஷ்டி மோதல்
மறைமுக தேர்தலுக்கான கூட்டம் தொடங்கியதில் இருந்து 30 நிமிடங்கள் காத்திருந்த பிறகு, பாதிக்கு மேல் உறுப்பினர்கள் வராத உள்ளாட்சிகள், மோதல்கள் ஏற்பட்ட உள்ளாட்சிகளில் மறைமுக தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டன. திமுகவினர் கோஷ்டி மோதல் காரணமாக மரக்காணத்தில் மறைமுகத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

திமுக ஆதரவுடன் அதிமுக வெற்றி
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியது. அதே போல செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக உறுப்பினர்கள் ஆதரவுடன், தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது.
நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில், வெற்றி பெற்ற உறுப்பினர்களை பவுன்சர்கள் பாதுகாப்புடன் கார்களில் அழைத்து வந்து வாக்களிக்க வைத்து, தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியது.

கொத்தாக அள்ளிய திமுக
இந்த மறைமுக தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் மாவட்ட சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட சேர்மனாக திமுகவை சேர்ந்த செம்பருத்தி துர்கேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட சேர்மனாக படப்பை மனோகரனும், விழுப்புரம் மாவட்ட சேர்மனாக ஜெயச்சந்திரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட சேர்மனாக திமுக சார்பில் போட்டியிட்ட புவனேஸ்வரி பெருமாளும், வேலூர் மாவட்ட சேர்மனாக திமுகவை சேர்ந்த பாபுவும், ராணிப்பேட்டை மாவட்ட சேர்மனாக ஜெயந்தி திருமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட சேர்மன் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட சூர்யகுமாரும் திருநெல்வேலி மாவட்ட சேர்மன் பதவிக்கு போட்டியிட்ட திமுகவை சேர்ந்த வி.எஸ்.ஆர்.ஜெகதீஷும் வெற்றி பெற்றனர். தென்காசி மாவட்ட சேர்மனாக திமுகவை தமிழ்செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஈரோட்டை கைப்பற்றிய திமுக
ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் ஆறு கவுன்சிலர்கள். இந்த பதவிக்கான தேர்தல் சென்ற 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தி.மு.க, அ.தி.மு.க தலா மூன்று இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர், துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் மூன்று முறை தேர்தல் தேதி அறிவித்தும் திமுக உறுப்பினர்கள் மட்டுமே வந்து இருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் வராததால் தேர்தல் தள்ளி போனது. இந்த நிலையில் 4 வது வார்டு அதிமுக உறுப்பினர் திடீரென இறந்து விட்டார்.

திமுகவினர் வெற்றி
காலியாக இருந்த 4 வது வார்டு உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. திமுக சார்பில் 4 வது வார்டில் போட்டியிட்ட விவேகானந்தன் வெற்றி பெற்றார். இதனால் திமுகவின் பலம் 4 ஆக உயர்ந்தது. இதையடுத்து ஈரோடு ஊராட்சி மன்றத்தின் தலைவர் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று காலை ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக திமுக சார்பில் 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பேரோடு பிரகாஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல் துணைத் தலைவராக திமுக சார்பில் 4 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விவேகானந்தனும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.