நாய் குரைத்ததால் பறிபோன உயிர்.. பக்கத்து வீட்டுக்காரரை குத்திக் கொன்ற குடும்பம்.. ‘பகீர்’ சம்பவம்!
காஞ்சிபுரம் : பக்கத்து வீட்டுக்காரர்கள் வளர்க்கும் நாய் குரைக்கும் சத்தம் இடையூறாக இருந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் டாட்டூ கலைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டாட்டூ கலைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மூவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பக்கத்து வீட்டு நாய் குரைத்ததை தட்டிக் கேட்ட வாலிபர், கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ராஜகோபால் பூபதி தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். அவருக்கு அமுதா என்ற மனைவியும் சவுமியா என்ற மகளும் சரண்சிங் என்ற மகனும் உள்ளனர். டாட்டூ கலைஞரான சரண்சிங் காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகே டாட்டூ கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் வணிகர் வீதி பகுதியில் அசைவ உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

பக்கத்து வீட்டில் சண்டை
இவர் வீட்டுக்கு அருகே உள்ள விஷ்ணு என்பவர் குடும்பத்திற்கும் சரண்சிங் குடும்பத்திற்கும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு விஷ்ணு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அறிவழகன் மற்றும் அமுதாவை தாக்கியதால் தகவலறிந்து தனது வீட்டிற்கு வந்த சரண்சிங் விஷ்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆவேசமடைந்த விஷ்ணு, விஷ்ணுவின் தாயார் சித்ரா மற்றும் விஷ்ணுவின் 3 நண்பர்களுடன் சேர்ந்து சரண்சிங் குடும்பத்தினரை கடுமையாக தாக்கினார்.

சரண் சிங் பலி
மேலும் கத்தரிக்கோல் மற்றும் ஸ்குரூ டிரைவர் போன்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு சரண் சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினரை குத்தினர். அதில் படுகாயமடைந்த சரண்சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி சரண்சிங் உயிரிழந்தார்.

கஞ்சா போதை
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்து சிவகாஞ்சி காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலை செய்த விஷ்ணு, கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்றும், வேண்டுமென்றே முன் பகை காரணமாக தனது நண்பர்களுடன் கஞ்சா புகைத்து சரண் சிங்கை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாய் குரைத்ததால்
மேலும் மூன்று நாட்களுக்கு முன்பு விஷ்ணு வீட்டில் வளர்க்கும் நாய் அதிகமாக சரண்சிங் வீட்டருகே சத்தமிட்டதாலும், விஷ்ணுவின் பாட்டி பாக்கு இடிக்கும் சிறிய உரலில் பாக்கு வைத்து இடிக்கும்போது ஏற்பட்ட சத்தத்தை தொடர்ந்து சரண்சிங் அவர்களிடம் வளர்ப்பு நாயை வேறு இடத்தில் கட்டி வைக்க வேண்டியதுதானே என்றும் ஏன் தேவையில்லாமல் எங்களுக்கு இடைஞ்சல் செய்கிறீர்கள் என்றும் விஷ்ணுவிடம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்துதான் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி
இதுதொடர்பாக சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் விநாயகம் நேரில் விசாரணை செய்து கொலை செய்த விஷ்ணு, அவருடைய தாயார் சித்ரா, தம்பி சிவா ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications