Flash Back:1978 டிச.21-ல் இந்திரா கைதை கண்டித்து குமரியில் 13 பேரை காங். பேருந்துடன் எரித்த கொடூரம்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் டிசம்பர் 21-ந் தேதியை குறிப்பிட்டு 44-ம் ஆண்டு நினைவஞ்சலி என ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் ஒரு துயரம் தோய்ந்த வரலாற்றை வெளிப்படுத்தி நிற்கிறது.
தமிழக அரசியலில் எத்தனையோ பேருந்து எரிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது உண்டு. ஆனால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இடம்பெற்றிருப்பது தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவம்தான்.
1991-96-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்தார் ஜெயலலிதா. அப்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளஸண்ட் ஸ்டே என்ற ஹோட்டலுக்கு விதிகளை மீறி 7 மாடி கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக பின்னர் திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தியா மீது போர் தொடுக்க சீனா ரெடியாகிறது, மத்திய அரசு மறைக்கிறது.. உஷார்! ராகுல் காந்தி எச்சரிக்கை
கொடைக்கானல் ஹோட்டல் வழக்கும் பேருந்து எரிப்பும்
கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், 2000-ம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். பேருந்துகளுக்கு தீ வைத்தனர். இதில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மாணவிகளின் பேருந்தும் அடக்கம். தருமபுரி அருகே அதிமுகவினரால் எரிக்கப்பட்ட இப்பேருந்தில் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். 16 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிமுகவினருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக்கப்பட்டு அவர்கள் விடுதலையும் செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி பேருந்து எரிப்பு
இந்த தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தை மிஞ்சிய ஒரு சம்பவம் தமிழகத்தில் 1978-ம் ஆண்டு நடைபெற்றது. கர்ப்பிணி உட்பட 13 பேரை ஓடும் பேருந்தில் எரித்து படுகொலை செய்யப்பட்ட அந்த சம்பவமும் அரசியல் காரணங்களால் நிகழ்ந்ததுதான். கன்னியாகுமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டி சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த சுவரொட்டியில், 1978-ம் ஆண்டு டிசமபர் 20-ந் தேதி இந்திராகாந்தி அம்மையார் கைதை கண்டித்து வெள்ளியோட்டில் ஓடும் பேருந்தை நிறுத்தி கர்ப்பிணி உட்பட 13 பேரை காங்கிரஸ் கலவரகாரர்கள் தீ வைத்து எரித்து கொன்ற நினைவு நாளில் வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலை குமரி மண்ணைவிட்டு விரட்ட உறுதியேற்போம்... உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரா கைது ஏன்?
1978-ம் ஆண்டு இந்திரா காந்தி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி, 78 ம் ஆண்டு நவம்பரில் நாடாளுமன்ற ஊழியர்களை மிரட்டினார் என்ற காரணத்தால், உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டு இந்திரா காந்தியை உரிமை மீறல் குழு ஒரு வார காலம் திஹார் சிறையில் அடைத்தது. இந்திரா காந்தியின் எம் பி பதவியும் பறிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ஒரே ஆண்டில் மொரார்ஜி தேசாய் அரசை இந்திரா காந்தி கவிழ்த்தார். 1980ல், அதாவது, ஆட்சியை இழந்த இரண்டரை ஆண்டுகளில் மீண்டும் இந்திய பிரதமாரானார் இந்திரா காந்தி என (2015) பதிவு செய்திருந்தார்.
குமரி பேருந்து எரிப்பு நடந்தது என்ன?
இச்சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் பெலிக்ஸ் என்பவர் எழுதியதாக சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ள செய்தி: டிசம்பர் 20, 1978 இரவு, நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த 'கட்டபொம்மன் போக்குவரத்து கழக பேருந்து' ஒன்று வெள்ளியோடு அருகே இரவு வழிமறிக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றப்படுகிறது. மூன்று பெண்கள்(ஒரு கர்ப்பிணி பெண்) உட்பட ஒன்பது ஏழை உயிர்களை பலி கொண்ட இந்த சம்பவத்தில், ஏழு பேர் அதே பேருந்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழகின்றனர். இதில் மூன்று உடல்களை(எலும்புகளை) யார் என்றே உறவினர்களால் அடையாளம் காட்டமுடியாத நிலையில், போலீசாராலேயே பின்னர் அடக்கம் செய்யப்பட்டனர். சம்பவத்தில் சூத்திரவாதியாக கருதப்பட்ட, இன்றளவும் 'தீக்கொழுத்தி' என்று மக்களால் வன்மத்தோடு விளிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்படுகிறார். வழக்கு நடைபெற்று வந்த வேளையில் மொராஜி தேசாய் அரசு கவிழ்ந்து மீண்டும் இந்திரா ஆட்சியை பிடிக்கிறார். மத்திய, மாநில அரசின் உறவுநிலை பின் நெருக்கமாக இந்த தீக்கொழுத்தியோ வெளியே வருகிறார். கட்சி இவருக்கான 'சேவை'யை பாராட்டி 1989-ஆம் வருட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக்குகிறது. நல்லவேளையாக அந்த கரும்புள்ளியை தனது முதுகில் வாங்கிக்கொள்ள விரும்பாத பத்மனாபுரம் தொகுதி மக்கள் இவரை தோற்கடிக்கின்றனர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தின் 44-ம் ஆண்டு நினைவஞ்சலி இப்போது கடைபிடிக்கப்படுகிறது!