மண்டைக்காடு பகவதி அம்மன் கோபம் ஏன்? வெளிப்படுத்திய தேவ பிரசன்னம்.. திடீரென வெளியே தோன்றிய துணை தேவதை
நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தேவ பிரசன்னத்தில் துணை தேவதை சிலை பூமிக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற பகவதி அம்மன் ஆலயம்.
இங்கு அண்மையில் தீ விபத்து ஏற்பட்டது. கருவறையின் மேற்பகுதியில் உள்ள மேற்கூரை தீப்பிடித்து எரிந்ததால், தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து - பெரும் சேதம்
கேரள மாநிலத்திலிருந்து வருகை
கோவிலில்.., அதுவும் கருவறை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது சகுன குறைவாக பார்க்கப்பட்டது. அம்மன் கோபத்தில் இருப்பதாக பக்தர்கள் கருதினர். இதையடுத்து கேரள மாநிலத்திலிருந்து தேவ பிரசன்னம் பார்க்க கூடிய ஜோதிடர் மற்றும் பூஜை செய்வோர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து தேவப்பிரசன்னம் பார்த்து வந்தனர்.
சேகர் பாபு, மனோ தங்கராஜ் ஆய்வு
இவர்களுக்கு உரிய ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றனர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏவுமான மனோ தங்கராஜ். இருவரும் கோவிலுக்கு நேரில் சென்று தேவபிரசன்னம் நடைபெறுவதை பார்த்துவிட்டு அங்கு நடைபெறக்கூடிய மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வை செய்தனர்.
தேவ பிரசன்னம்
ஒவ்வொரு விஷயமாக, அம்மனிடம் கருத்துகளை கேட்டு தெரிந்து கொள்வது தேவபிரசன்னம் செய்பவர்களின் வேலை. எனவே இது ஒரே நாளில் முடியாது என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. இங்கே என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பதை கண்டறிந்து அதை தீர்த்து வைக்கும் கடமை அரசுக்கு உள்ளது என்று சேகர்பாபு உறுதியளித்திருந்தார். இதேபோல அதிகாரிகளும் கோவிலில் பணிக்கு அமர்த்தப்பட்டு தேவ பிரசன்னம் மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல விஷயங்கள் வெளியே வந்தன
இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ஜோதிடர் ஸ்ரீநாத், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தொடர்ந்து தேவபிரசன்னம் நடத்தி அம்மனின் திருவுள்ளம் என்ன என்று கேட்டு வந்தனர். இந்த தேவ பிரசன்னத்தின் போது சில அறிவுரைகளை அம்மன் வழங்கியுள்ளார். மேலும், கோவிலில், முன்பு இருந்து மணலுக்குள் மூழ்கிப் போயிருந்த துணை தேவதை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிவேதனத்தில் குறைபாடு இருக்கு
பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீ விபத்துக்கு அம்மனின் விருப்பம் தான் காரணம், தினசரி செய்யப்படும் நிவேதனத்தில் குறைபாடுகள் இருக்கின்றன. இதை களையப்பட வேண்டும். கோவில் தந்திரிக்கு உரிய மரியாதைகள் தரப்பட வேண்டும். நாகர் சன்னதியில் கூரை அகற்றப்பட்டு மேல்பகுதி திறந்த வெளியாக மாற்றப்படவேண்டும் என்று தேவ பிரசன்னத்தில் அம்மன் தெரிவித்துள்ளார்.
பலா மரக்கட்டை தேவை
அம்மனுக்கு மாதம் ஒருநாள் மூன்று வேளை பிராமண பூஜை நடைபெற வேண்டும், கொடிமரத்தை சுற்றி பலிக்கல் அமைக்கப்பட வேண்டும், மூலஸ்தானத்தின் கூரை அமைக்கப்படும் போது அது பலா மரக்கட்டைகளை கொண்டு பயன்படுத்தப்பட வேண்டும், மாதம் ஒருநாள் தேவசம்போர்டு சார்பில் அம்மன் சிலையை தங்கத் தேரில் அமர்த்தி பவனி வர வேண்டும், இவ்வாறு தேவ பிரசன்னம் கூறப்பட்டுள்ளது.
துணை தேவதை இருக்குதே
இதில் மற்றொரு தகவலும் வெளியானது. அந்த கோவிலில் ஏற்கனவே அம்மனுடன் ஒரு யக்ஷி-துணை தேவதை இருப்பது தேவ பிரசன்னத்தில் தங்களுக்கு தெரிவதாக நம்பூதிரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், கோவில் நிர்வாகிகள் அதுபோல இந்த சிலையும் இல்லையே என்று கூறி உள்ளனர். ஆனால் மறுபடியும் தேவப்பிரசன்னம் பார்த்தபோது அது எங்கே இருக்கிறது என்று தெரிந்தது. கோவிலுக்குள் ஒரு பகுதியில் மண்ணுக்குள் தோண்டியபோது அங்கு சிலை இருப்பது கண்டறியப்பட்டது. இதுதான் அந்த துணை தேவதை என்பது உறுதி செய்யப்பட்டது.
பக்தர்கள் நெகிழ்ச்சி
இத்தனை வருடங்களாக மண்ணுக்குள் மூழ்கிப் போயிருந்த துணை தேவதை தேவப்பிரசன்னம் மூலமாக வெளிப்பட்டுள்ளது. இது பக்தர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. துணை தேவதைக்கு உரிய பூஜைகள் செய்யப்பட்டு சாந்திப்படுத்தப்பட்டால் எந்த இடையூறுகளும் ஏற்படாது என்று நம்பூதிரிகள் தெரிவித்துள்ளனர்.