கூசும் வார்த்தைகளால் திட்டினார்.. கரூர் மாணவி குடும்பத்திற்கு நேர்ந்த அநீதி.. உண்மையை உடைத்த ஜோதிமணி
கரூர்: கரூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் மாணவியின் குடும்பத்தாரிடம் தவறாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி புகார் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் பல்வேறு பள்ளிகளில் மாணவிகள் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோவை மாணவி தற்கொலை சம்பவமே இன்னும் விசாரிக்கப்பட்டு முழுமையாக நீதி கிடைக்காத நிலையில் கரூர் மாணவியின் தற்கொலை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்காம்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!
கரூரை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி கடந்த 19-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தனக்கு பாலியல் ரீதியாக நடந்த கொடுமைகள் காரணமாக அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
பாலியல் கொடுமை
தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் இனி யாருக்கும் நேர கூடாது. பாலியல் கொடுமைகளால் சாகும் கடைசி பெண் நானாக மட்டுமே இருக்க வேண்டும். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பற்றி பேசுவதற்கு கூட அச்சமாக இருக்கிறது என்று அவர் கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்த மாணவி படிக்கும் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ள நிலையில் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
கண்ணதாசன்
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்த போது வெங்கமேடு காவல் ஆய்வாளர் கண்ணதாசன் அதை பற்றி விசாரிக்காமல் தட்டிக்கழித்துள்ளார். அதோடு புகார் அளிக்க வந்த மாணவியின் குடும்பத்தை தரகுறைவாக நடத்தி உள்ளார். மாணவியின் தாயாரை, நீங்கதான் அக்யுஸ்ட், உங்களுக்கு யார் ஷேர் போட்டது என்று கூறியதோடு இரவு முழுக்க அவர்களை போலீஸ் நிலையத்திலேயே தங்க வைத்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தொடக்கத்தில் இருந்தே கரூர் எம்பி என்ற முறையில் இந்த சம்பவம் குறித்து நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். காவல் ஆய்வாளர் கண்ணதாசன் செய்த தவறையும் நேற்று அவர் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எம்பி ஜோதிமணி, கரூரில் மாணவி பாலியல் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை. புகார் கொடுக்கச் சென்ற குடும்பத்தினரை காவல் துறை ஆய்வாளர் கண்ணதாசன் குடிபோதையில் பெண்ணின் தாயாரை எழுதக் கூசும் வார்த்தைகளால் பேசி,உறவினர்களை அடித்து சித்ரவதை செய்திருக்கிறார்.
காவல் ஆய்வாளர் பணிநீக்கம்
இன்று அந்த தாய் என்னிடம் சொல்லி கதறி அழுதபோது என் நெஞ்சே உறைந்து போனது. இந்த காவல் நிலையத்தை நம்பி பெண்கள் எப்படி புகார் கொடுக்க போகமுடியும்? உடனடியாக காவல் ஆய்வாளர் பணிநீக்கம் செய்யப்படவேண்டும். ஆய்வாளர் மீது முறையாக வழக்கு பதிவுசெய்யபட்டு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
ஜோதிமணி கோரிக்கை
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட தமிழ்நாடு அரசு புகாரை வாங்க மறுத்த காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இந்த காவல் அதிகாரி மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, கரூரில் பாலியல் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார்,உறவினர்களிடம் கொடூரமாக நடந்துகொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசன் நேற்று இரவு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் மீது இதுவரை வழக்கு பதிவுசெய்யப்படவில்லை.
வழக்கு பதிவு?
உடனடியாக அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு நிரந்தர பணிநீக்கம் செய்யப்படவேண்டும். இதுதொடர்பாக நேற்றே தமிழக முதல்வர், டிஜிபி இருவருக்கும் புகார் அனுப்பியுள்ளேன்.அந்த பெண்ணின் குடும்பத்திற்கு சட்டரீதியான உதவிகளை வழங்க ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ஆய்வாளர் கண்ணதாசன் குடிபோதையில் இருந்திருக்கிறார்.இரவு நேரத்தில் பாலியல் கொடுமையால் பெண்ணை பறிகொடுத்த கணவனை இழந்த ஒரு பெண்ணை காவல் நிலையத்திற்கு வரவழைத்திருக்கிறார். எழுதகூசும் வார்த்தைகளால் கேவலமாக பேசியிருக்கிறார் இரவுமுழுவதும் காவல் நிலையத்தில் பெண்களை இருக்க செய்திருக்கிறார்.
தண்டனைக்குரிய குற்றம்
இரவு முழுவதும் உறவினர்களை லாக்கப்பில் வைத்து அடித்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கவும் முயன்றிருக்கிறார். பாலியல் கொடுமைக்கு நீதிகேட்டு காவல்நிலையம் போனால் இதுதான் நடக்கும் என்றால் அந்த குடும்பம் என்னபாடு பட்டிருக்கும்? இது தண்டனைக்குரிய குற்றமில்லையா?
என்ன கோரிக்கை
தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் சத்தமில்லாமல் மீண்டும் உள்ளே வந்துவிடுவார்.மீண்டும் அதே தவறை செய்வார். காவல்துறையில் நேரம் காலமில்லாமல் சிறப்பாக பணியாற்றுகிற அதிகாரிகளின் நற்பெயரையும் சேர்த்து இதுபோன்ற கயவர்கள் கெடுத்துவிடமாட்டார்களா?உடனடியாக காவல்துறை சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும், என்று ஜோதிமணி எம்பி குறிப்பிட்டுள்ளார்.