கரூர் விவகாரம்.. தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஜாமீனில் விடுவிப்பு!
கரூர்: கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் இருவருக்கும் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது. கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் இருவருக்கும் காவல் நீட்டிப்பு இல்லாமல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன்பின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இதன்பின் இருவரையும் கஸ்டடியில் எடுத்த காவல்துறை, 2 நாட்கள் விசாரணை நடத்திவிட்டு மீண்டும் நீதிமன்றக் காவலில் அடைத்தது. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால், அவர்களையும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட வேண்டும் என்பதால் ஜாமீன் மனு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்ற காவல் முடிந்து, திருச்சி சிறையில் இருந்து காணொளி வாயிலாக மதியழகன் மற்றும் பவுன்ராஜ் இருவரும் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது எஸ்ஐடி தரப்பில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டாலும், சிபிஐ இன்னும் விசாரணை அதிகாரியை நியமிக்காததால், வழக்கின் ஆவணங்கள் ஒப்படைக்கப்படவில்லை.
சிபிஐ வழக்கை ஏற்கும் வரை அவர்களின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டது. இதையடுத்து தவெக தரப்பில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எஸ்ஐடி கலைக்கப்பட்டதால், காவல் நீட்டிப்பு வழங்க கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன்பின் இறுதியாக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் இருவருக்கும் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications