உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு உதாரணம் நம்ம முதல்வர்! நாமும் அவர் போல் உழைக்கணும் -செந்தில்பாலாஜி
கரூர்: உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் நாமும் அவர் போல் உழைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
'கல்லூரிக் கனவு' எனும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசும் போது இதனைத் தெரிவித்தார்.
அதன் விவரம் வருமாறு;

கல்லூரிக் கனவு
கரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 'கல்லூரிக் கனவு' எனும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வெண்ணைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அதில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் பேசினார்.

செந்தில்பாலாஜி பேச்சு
அப்போது அவர் கூறியதாவது, ''அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிகளும் உயர் கல்வி பயில வேண்டும் என்பதற்காக மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கியிருக்கிறார். இதேபோல் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய போது, தமிழகத்திற்கான முதல்வராக நான் இருக்கிறேன், நீங்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வராக இருக்க வேண்டும் என்றார்''.

அரசுப் பள்ளி
''அரசுப் பள்ளியில் படித்த பலரும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனர். மிகச் சிறந்த பள்ளியாக அரசுப் பள்ளிகளை உருவாக்கி வைத்துள்ளார் முதல்வர். 12,200 பேரும் சிறந்த முறையில் படித்து பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும். உழைப்பவர்கள் முதல் நிலைக்கு வர முடியும் என்பதற்கு நம்ம முதலமைச்சரே மிகச்சிறந்த உதாரணம்.''

50 ஆண்டு கால உழைப்பு
''ஒரு வருடம் 2 வருடம் அல்ல 50 ஆண்டு கால உழைப்புக்கு சொந்தக்காரர் முதலமைச்சர். அவர் போல் நாமும் உழைக்க வேண்டும் என தோன்றும். எந்த சூழலிலும் உயர் கல்விக்கு அழைத்துச் செல்ல உறுதுணையாக நாங்கள் இருப்போம். நான் அரசுப் பள்ளி, கல்லூரியில் படித்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்றார்.''












Click it and Unblock the Notifications