செந்தில் பாலாஜியை ரவுண்டு கட்டிய பாஜக.. ‘நோட்டா’ - சளைக்காமல் அமைச்சர் கொடுத்த கவுன்ட்டர் அட்டாக்!
கரூர் : ஊழல் வழக்கை கையில் எடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜகவினர் குறிவைத்துள்ள நிலையில், நோட்டா உடன் போட்டி போடும் கட்சி என பாஜகவை அட்டாக் செய்து பேசியுள்ளார் செந்தில் பாலாஜி.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று ஆளுநரைச் சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - அமைச்சர் செந்தில் பாலாஜி இடையேயான மோதல் பல மாதங்களாக புகைந்து வருகிறது. இருவரும் ட்விட்டர் பதிவுகளுக்கு பதிலடி கொடுப்பது, பிரஸ் மீட்டில் அட்டாக் செய்வது என தொடர்ந்து வந்த நிலையில், மீண்டும் மோதல் சூடுபிடித்துள்ளது.
உரிமையா கேட்ட ஸ்டாலின்.. பார்த்ததுமே கலங்கிய திப்பம்பட்டி ஆறுச்சாமி.. ’முடிஞ்ச்’ பாஜக திட்டம் பனால்!
ஆளுநரை சந்தித்த பாஜக நிர்வாகிகள்
பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தலைமையில் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினர். அப்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜகவினரின் இந்தப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒத்துக்கிட்டாங்களே
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "செந்தில் பாலாஜி, 2011-2014ல் போக்குவரத்து கழகத்தில் வேலைக்கு ஆள் எடுக்கும் போது, பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்கிறார்கள். இந்த வழக்கு பற்றி முதலில் பேசியது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, யாரெல்லாம் குற்றம் சுமத்தினார்களோ அவர்கள் எல்லாம் ஐகோர்ட்டில் அஃபிடவிட் தாக்கல் செய்கிறார்கள். அதில், செந்தில் பாலாஜியிடம் கொடுத்த பணத்தை அவர் திருப்பி தந்துவிட்டார். எனவே, அந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம் எனக் கூறியிருந்தனர்.
இந்தியாவிலேயே முதன்முதலாக
இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு ஊழல் தடுப்பு வழக்கில் அமைச்சர் ஒருவர் பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். பணம் கொடுத்த 2 பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பணம் வாங்கிக் கொடுத்த ஒரு புரோக்கர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன் பின், நாங்கள் மனசு மாறி விட்டோம். வழக்கு போடாதீர்கள் என அவர்களே ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறார்கள். வழக்கிற்கு இதை விட என்ன வேண்டும்? அதனால் தான் பாஜக தலைவர்கள் ஆளுநரை சந்தித்து, ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்." எனத் தெரிவித்தார்.
கருத்து மோதல்
இந்நிலையில் இன்று கரூரில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 'வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியிலும் திமுக மகத்தான வெற்றி பெற இளைஞர் அணியினர் தீவிரமாக கட்சி பணி செய்திட வேண்டும். எதிர்க்கட்சிகள் நமது அரசை குறை கூறும்போது சமூக வலைதளங்களில் அவர்களின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து மோதல்கள் இருக்க வேண்டும். ஆனால் நேரடியாக எந்தவித மோதலும் இருக்கக் கூடாது.
நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி
நோட்டாவுடன் போட்டி போடக்கூடிய கட்சியினர் கூறும் தவறான கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். தமிழக முதலமைச்சர் இது எனது அரசு என்று கூறாமல் நமது அரசு என்று தான் கூறி அனைவரையும் சமமாகப் பார்க்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.