மடியில் கனமுள்ளது; அதான் வழியை கண்டு பயப்படுகிறார்கள்.. இ.பி.எஸ்.சை தாக்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி!
கரூர்: மடியில் கனமுள்ளது. அதனால்தான் வழியை கண்டு பயப்படுகிறார்கள் என்று கோடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கிடங்கில் தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர்.
அப்போது வட சென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமாகி விட்டதாக பகீர் குண்டை தூக்கி வீசினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

நிலக்கரி மாயம்
பதிவேட்டில் உள்ளதற்கும், களத்தில் உள்ள இருப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது.மேலும், 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல், பதிவேட்டில் மட்டும் உள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட முதல் கடா ஆய்வில் 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை என்று தகவல் பெறப்பட்டுள்ளது. வேறு என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அப்போது கூறி இருந்தார்.

செந்தில்பாலாஜி பேட்டி
இந்த நிலையில் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று கரூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வட சென்னை அனல் மின் நிலைய நிலக்கரி மாயம் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ''நிலக்கரி குறைந்துள்ளதாக குழு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நிலக்கரி மாயமானது குறித்து முதல்கட்ட விசாரணை அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை உறுதி
இறுதிகட்ட ஆய்வுக்கு பிறகே முழுமையாக தகவல் வெளியிடப்படும். முன்னாள் அமைச்சர் அமைத்த குழு அறிக்கையை வெளியிடவில்லை. கடந்த ஆட்சியில் குழு அமைத்திருந்தால் அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்க வேண்டும். கடந்த ஆட்சியில் இது தவறு என தெரிந்தும் யாரை காப்பாற்ற முயற்சி நடந்துள்ளது? கடந்த ஆட்சியில் யார் தவறு செய்திருந்தாலும் தமிழ்நாடு அரசு நிச்சயமாக நடவடிக்கை இருக்கும். இதேபோல் மேட்டூர், தூத்துக்குடி அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

ஏன் பயப்பட வேண்டும்?
இதனை தொடர்ந்து கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தன்னை சேர்க்க சதி என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் கூறிய அவர், ' தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படிதான் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் விசாரணையை கண்டு ஏன் பயப்பட வேண்டும்? மடியில் கனமிருந்தால்தானே வழியை கண்டு பயப்பட வேண்டும். இவர்களுக்கு மடியில் கனமுள்ளது. அதனால்தான் வழியை கண்டு பயப்படுகிறார்கள் சட்டத்துக்குட்பட்டுதான் விசாரணை நடைபெற்று வருகிறது' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications