வெறும் 2 நிமிடம்.. அரசு பணி கனவு கலைந்ததே! கதறிய பெண்.. கடுப்பான கணவர்.. குரூப் 2 தேர்வில் பரபரப்பு
கரூர்: தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2வுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கரூரில் 2 நிமிடம் தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கணவரோடு வந்த பெண் உள்பட பலர் தேர்வு எழுத முடியாமல் வீட்டுக்கு திரும்பினர்.
Recommended Video
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு 2, 2ஏ பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்றது.
இந்த தேர்வுக்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் 59 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு : 11.78 லட்சம் பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர் - இது அவசியம்
வீடியோ பதிவு பாதுகாப்பு
கரூர் கோட்டம், குளித்தலை கோட்டம் என 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு 17,111 பேர் போட்டி தேர்வுகள் எழுதுகின்றனர். துணை ஆட்சியர் நிலையில் 8 பறக்கும் படைகளும், பாதுகாப்பிற்காக ஒவ்வொரு மையத்திலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வீடியோ கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் 880 அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
9 மணிக்கு துவங்கிய தேர்வு
முன்னதாக கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்துக்கு தேர்வெழுதும் ஆவலில் காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் வந்தனர். அவர்கள் தேர்வறையை தேடிச்சென்று இருக்கையில் அமர்ந்தனர். வினாத் தாள்கள் பிரிக்கப்பட்டு 9 மணிக்கு வழங்கப்பட்டன. வினாத்தாளை வாங்கி அவர்கள் படித்து தேர்வெழுத துவங்கினர்.
தாமதத்தால் அனுமதி மறுப்பு
இந்நிலையில் ஒரு சிலர் காலை 9.02 மணிக்கு பள்ளிக்கு வந்தனர். போக்குவரத்து உள்ளிட்ட சிலவற்றை காரணமாக கூறி தேர்வு எழுத அனுமதி கோரினார். தேர்வு துவங்கி விட்டதால் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறினர். மேலும் நுழைவு வாயில் மூடப்பட்டதால் அவர்கள் தேர்வெழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கணவருடன் வந்தவருக்கும் மறுப்பு
இதேபோல் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத கணவருடன் பெண் ஒருவர் வந்தார். காலை 9.02 மணிக்கு வந்ததாக கூறி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவரது கணவர் கோபமடைந்தார். மேலும் அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சுமார் 10 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.