தேடி வந்து துடைப்பத்தில் அடிவாங்கிய மக்கள்! ஓசூர் அருகே வினோதம் - 382 வருசமா இப்டிதான் நடக்குதாம்
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே 382 ஆண்டுகால பழமைவாய்ந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்ட மக்கள் துடைப்பம், முறத்தால் அடிவாங்கி வினோத வழிபாடு செய்தனர்.
ஒசூர் அருகே அமைந்துள்ளது டி.கொத்தப்பள்ளி கிராமம். இங்கு 382 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜ சுவாமி கோவில் அமைந்து இருக்கிறது. ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் கோயிலுக்கு வந்த வழிபட்டு செல்வது வழக்கமாக உள்ளது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். பல்வேறு பூஜைகளுடன் வெகு விமர்சையாக நடத்தப்படும் இந்த திருவிழாவில் டி.கொத்தப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தோரோட்டம் இன்று நடைப்பெற்றது. அதில் தர்மராஜ சுவாமி தேரின் வடத்தை டி.கொத்தப்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பிடித்து இழுத்து வழிபட்டனர். இந்த திருவிழாவுக்காக கோயில் பூசாரி 10 நாட்கள் விரதமிருப்பார். அவருக்கு அருள் வந்து பக்தர்களின் தலையில் துடைப்பம் மற்றும் முறத்தால் அடிப்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றும், கோயில் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் பலர் பூசாரியிடம் துடைப்பத்தால் அடிவாங்கினர். 10 நாட்கள் உணவில்லாமல் விரதமிருக்கும் பூசாரி மீது தர்மராஜ சாமி அருள் தருவதாக நம்பப்படுகிறது. துடப்பம்,முறத்தால் அடிவாங்குவதால் குழந்தை பாக்கியம், கடன் பிரச்சனையிலிருந்து தீர்வு, திருமண தடை நீங்கி குடும்பங்களில் சமாதானம் உள்ளிட்டவை நடக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.
”வேதனையடைத்தேன்!” சிவகாசி பட்டாசு விபத்தில் ஒருவர் பலி - ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
கிராம மக்கள் துடைப்பம் மற்றும் முறத்தால் அடிவாங்கும் வினோத வழிப்பாட்டினை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களும் வருகை தந்திருந்தனர்.