தலைவலி கொடுத்த ஓசூர்.. தட்டித் தூக்கிய திமுக - பின்னணியில் நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக அதிமுக என இரண்டு கட்சிகளும் போட்டிபோட்டு வந்த நிலையில் திமுக மேயர் பதவியில் வென்றிருக்கிறது.
தமிழகத்தில் பிப்ரவரி 19ல் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் திமுக அதிகமாக வென்றிருந்தது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில், 20 மாநகராட்சிகள் ஆளும் தி.மு.க கூட்டணியின் வசமாகியிருந்தது. ஆனால் ஓசூர் மாநகராட்சி மட்டும் இழுபறியில் இருந்தது.
”மேயர்” கனவில் கூட்டணி கட்சிகள்..அசைந்து கொடுக்காத திமுக-அதிமுக.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பரபர
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் 45 கவுன்சிலர் இடங்கள். இதில் திமுக 21 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும், அதிமுக 16 இடங்களிலும், பாஜக மற்றும் பாமக தலா 1 இடத்திலும் வென்றிருந்தன. அதோடு, சுயேச்சைகள் 5 இடத்தில் வெற்றி பெற்றிருந்தனர். ஓசூர் மேயர் பதவியை கைப்பற்ற திமுக பெற்ற 21 இடங்கள் சேர்த்து இன்னும் ஒரு இடம் தேவைப்பட்டது.
சுயேட்சை
அதுவே அதிமுக கட்சிக்கு இன்னும் ஏழு கவுன்சிலர்களின் ஆதரவு வேண்டும். அதனால் அதிமுக, அங்கு வெற்றி பெற்ற பாஜக, பாமக மற்றும் சுயேட்சைகளை நாடியது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் கவுன்சிலர்களை பாதுக்காப்பாக வைத்திருந்தது. இதையொட்டி ஓசூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வெளி மாநில ரிசார்ட்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பதவியேற்பு
பல கவுன்சிலர்களின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம் கவுன்சிலர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு, பேருந்துகள் மூலம் உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பின்னர் மீண்டும் பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னணி
எங்களுக்கு ஆதரவு கொடுத்தால், ஒரு கோடி ரூபாய், இன்னோவா கார் என கவுன்சிலர்களை இழுக்க பேரம் நடந்திருக்கிறது. அதனால் திமுக, காங்கிரஸ், பாமக மற்றும் ஆதரவு சுயேட்சைகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. மறைமுக மேயர் தேர்தல் நடைபெறும் வரை, யாரும் வெளி உலகத்துடன் தொடர்பில் இருக்காதபடி பார்த்துக்கொண்டனர்.
வெற்றி
இதையடுத்து மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் இன்று மறைமுக வாக்கெடுப்புடன் நடந்தது. இதில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ சத்யா 27வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு 18 வாக்குகள் கிடைத்தன. இதனால் திமுக வேட்பாளர் சத்யா ஓசூர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு பாமக கவுன்சிலர் மறைமுக ஆதரவு தெரிவித்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.