1999ல என்ன நடந்துச்சு? தனியா போய் டீ.. ஏற்றுக்கொள்வானா தொண்டன்? - கே.பி.முனுசாமி சரமாரி தாக்கு!
கிருஷ்ணகிரி : 1999ல் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு, ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.
சின்னம் தொடர்பான படிவத்தில் கையெழுத்திடும் தார்மீக உரிமையை இழக்கிறார் ஓபிஎஸ், கட்சியில் இருந்து கொண்டே பொதுக்குழு நடத்த இடையூறு செய்தார் ஓபிஎஸ் என சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார் கே.பி.முனுசாமி.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுடன் தேநீர் அருந்தியது பற்றியும் கேள்வி எழுப்பி ஓபிஎஸ்ஸை விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கே.பி.முனுசாமி.
ஹோண்டா சிட்டி காரில் தனியாக சென்ற ஓ.பன்னீர்செல்வம்! யாருடன் ரகசிய சந்திப்பு? பரபரப்பான அரைமணி நேரம்!
இடையூறு செய்தார் ஓபிஎஸ்
அதிமுகவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே மோதல் முற்றி தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான கே.பி.முனுசாமி இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சின்னம் தொடர்பான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடும் தார்மீக உரிமையை இழக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். கட்சியில் தலைமைப் பதவியில் இருந்து கொண்டே பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த இடையூறு செய்தார் ஓபிஎஸ்.
விவாதம் நடத்தியிருக்க வேண்டும்
ஜூன் 14ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பற்றியும், கட்சியின் தலைமை பற்றியும் விவாதங்கள் நடைபெற்றன. அந்த விவாதங்களின் முக்கிய கரு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதை வைத்து விவாதம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால், பொதுக்குழு நடத்துவதை விரும்பாமல் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினார்கள்.
பொதுக்குழுவுக்கு எதிராக
பொதுக்குழுதான் கட்சியின் முடிவை எடுக்கக்கூடிய மைய அமைப்பு. பொதுக்குழுவில் கொண்டு வரக்கூடிய தீர்மானம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டால் தான் அது கொண்டுவரப்படும். இல்லையென்றால் நிராகரிக்கப்படும். கட்சியின் தலைமைப் பதவியில் உள்ள ஓபிஎஸ் பொதுக்குழுவை நிறுத்த கடிதம் எழுதுவதோடு நின்றுவிடவில்லை. கட்சியின் தலைவரே நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளார்.
ஓபிஎஸ்ஸூக்கு உரிமை இல்லை
அதிமுகவின் கொள்கை விதிப்படியே கட்சியின் ஒரு உறுப்பினர் கட்சிக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றால் கழக விதிகளின்படி கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இதையெல்லாம் நன்கு அறிந்த ஓபிஎஸ், நீதிமன்றத்திற்குச் சென்று தடை ஆணை கேட்கிறார். காவல்துறையிலும் மனு அளிக்கிறார். அவர் எப்படியாவது பொதுக்குழுவை நடத்தவிடக் கூடாது என்ற தீய எண்ணத்தோடு செயல்பட்டார். இப்போது இரட்டை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பும் தார்மீக உரிமையை இழக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
மெஜாரிட்டி யார் பக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள் 74 பேரில் 70 பேர் ஆதரிக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் 66 பேரில் 63 பேர் ஏகமனதாக ஆதரிக்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் 75 பேரில் 70 பேர் ஆதரிக்கிறார்கள். கட்சியின் உயிர்நாடியான பொதுக்குழுவின் 2665 உறுப்பினர்களில் 2582 பேர் ஏகமனதாக ஆதரிக்கிறார்கள். ஒரு ஜனநாயக நடைமுறை கொண்ட இயக்கத்திற்கு இதைவிட ஒரு மெஜாரிட்டி எப்படி காட்ட முடியும்? ஓபிஎஸ் இதை ஏற்று எங்களோடு இணைந்து செயல்பட வேண்டும்.
ஒன்றிய செயலாளர்
ஜெயலலிதா இருந்தபோது 1999ல் பெண்ணாகரம் ஒன்றிய செயலாளர் டிஆர் அன்பழகன் ஒகேனக்கலில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார். அவர் சென்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பின்புறம் உள்ள சுவரில் திமுகவின் சின்னமான உதயசூரியன் வரைந்திருக்கிறது. அதை இவரை விரும்பாத சிலர் ஜெயலலிதாவிடம் தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாக அவரின் ஒன்றிய செயலாளர் பதவியைப் பறித்து, கட்சியில் இருந்தும் நீக்கினார் ஜெயலலிதா.
ஜெயலலிதா காலத்தில்
அப்போது ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளரான நான் கருணாநிதியின் குடும்ப நிகழ்ச்சிக்குச் சென்றால் அதிமுக தொண்டன் என்னை ஏற்றுக்கொள்வானா? என்று கேட்டார். அவ்வளவு உணர்வுமிக்க தலைமையை ஏற்றுக்கொண்ட தாங்கள், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடந்த ஆளுநர் தேநீர் விருந்தின்போது நாங்கள் அனைவரும் வெளியே வந்த பிறகும், முதலமைச்சர் ஸ்டாலினோடு சேர்ந்து தேநீர் அருந்தினீர்களே.. அதைப் பார்த்து அதிமுக தொண்டன் ஏற்றுக்கொள்வானா?
நீர்த்துப்போன ஓபிஎஸ்
சட்டமன்றத்தில் வைத்து பராசக்தி வசனம் பேசி கருணாநிதி ரசிகன் என்று சொன்னீர்களே.. அதை எப்படி அதிமுக தொண்டன் ஏற்றுக்கொள்வான்? உங்கள் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உங்கள் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு அதை இன்று அமைச்சர் துரைமுருகனே பொதுமேடையில் பேசுகிறார். இதைப் பார்க்கும் அ.தி.மு.க தொண்டனுக்கு எப்படி இருக்கும்? இதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் இயக்கத்தில் நீர்த்துப்போய் விட்டார். எனவே அவரை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது." எனத் தெரிவித்துள்ளார்.