தடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை
லண்டன்: இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகப் பிரிட்டன் சுகாதார துறைச் செயலர் மாட் ஹான்காக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா (B.1.167) வகை வேறு சில நாடுகளுக்கும் பரவியுள்ளது. இது மற்ற கொரோனா வகைகளைவிட அதிவேகமாகப் பரவுவதால் பல நாடுகளும் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு
குறிப்பாக இந்த கொரோனா வகையின் பாதிப்பு பிரிட்டன் நாட்டில் அதிகமாக உள்ளது. எனவே, பிரிட்டன் மக்கள் உடனடியாக தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டின் சுகாதாரத் துறைச் செயலர் மாட் ஹான்காக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உருமாறிய கொரோனா
பிரிட்டன் நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவைவிட இந்த B.1.167 வகை வேகமாக பரவுவதாக மாட் ஹான்காக் தெரிவித்தார். பிரிட்டன் நாட்டின் சில பகுதிகளில் இந்த வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களே இந்த B.1.167 வகை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதியாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள்
இது குறித்து மாட் ஹான்காக் மேலும் கூறுகையில், இந்த B.1.167 வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி வேலை செய்யும் என்று நம்புகிறோம். இந்த வகை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி எடுத்துக் கொள்ளத் தகுதியுள்ளவர்கள் உடனடியாக தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனைவருக்கும் நாம் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
வெளியே செல்ல வேண்டாம்
இந்த கொரோனா வகை மிக வேகமாகப் பரவுகிறது. எனவே, மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் முடிந்த வரை வீடுகளிலேயே இருக்க வேண்டும். மக்கள் தேவையின்றி வெளியே சென்றால் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நாட்டில் இதேதான் நடந்தது. தடுப்பூசி உங்களைக் காக்கும் என்றாலும் அது நிச்சயம் 100% காக்கும் என உறுதியாகக் கூறிவிட முடியாது. எனவே மக்கள் முடிந்தவரை வெளியே செல்லக் கூடாது" என்றார்.
கூடுதல் ஆய்வுகள் தேவை
இந்த B.1.167 கொரோனா வகை காரணமாகவே இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்குக் கடந்த ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், வரும் காலங்களில் பிரிட்டன் நாட்டில் இந்த B.1.167 கொரோனா வகையின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த உருமாறிய கொரோனா எந்தளவுக்கு வேகமாகப் பரவுகிறது என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை என்றும் இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மாட் ஹான்காக் தெரிவித்தார்.