ராணி எலிசபெத் மறைவு: இந்தியாவில் 11-ம் தேதி ஒருநாள் துக்கம் அனுசரிப்பு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
லண்டன்: பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவையொட்டி வருகிற 11-ஆம் தேதி அன்று ஒருநாள் இந்தியா முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரிட்டனின் நீண்டகால மகாராணி என்ற சரித்திரப் பெருமைக்குரியவர் 2-ம் எலிசபெத் ராணி.
96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை கடந்த சில நாட்களாக சரியில்லாமல் இருந்தது. எனினும் அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார்.

உடல்நிலை சரியில்லாமல்..
இந்த நிலையில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசெபத்தின் உடல்நிலை கடந்த 2 நாட்களாகவே ஆரோக்கியமாக இல்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இந்திய நேரப்படி இரவு சுமார் 12.30 மணியளவில் அவர் காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரல் அரண்மனையில் எலிசபெத் மகாராணி மரணமடைந்தார். அவரது மறைவு செய்தி அறிந்ததும் உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

பிரதமர் மோடி இரங்கல்
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசெபத் மறைவு குறித்து பிரதமர் மோடியும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த ராணியாக அவர் பொறுப்பேற்றிருந்தார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைப்பிடித்து வந்தார். அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும், இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியிருந்தார்.

இந்தியா முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படும்
இந்த நிலையில் இந்தியா சார்பில், மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அனுசரிக்கும் வகையில் இந்தியாவில் ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள் அறிவிப்பில், ''மறைந்த மகாராணி 2-ஆம் எலிசெபத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் வருகிற 11-ஆம் தேதி ஒருநாள் இந்தியா முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படும்.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படாது
எனவே அன்று ஒருநாள் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கப்படப்படும். மேலும் அன்றைய தினம் அரசு சார்பில் கொண்டாட்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படாது'' என்று அதில் கூறப்பட்டுள்ளது. மகாராணி 2-ஆம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் எப்போது நடைபெறும் என்று இதுவரை பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிக்காத நிலையில், அவர் மறைந்ததில் இருந்து 11-ம் நாளில் இறுதிச்சடங்குகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications