'மூளையை ஊடுருவிய தாலிபானின் ஒற்றை தோட்டா.. 9 ஆண்டுகளாக மீள முயல்கிறேன்'- பயங்கர நினைவை பகிரும் மலாலா
லண்டன்: பெண் கல்விக்காகப் பாகிஸ்தானில் குரல் கொடுத்து வந்த மலாலா மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் அவர்களது ஒற்றை துப்பாக்கி தோட்டா காரணமாக ஏற்பட்ட பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்று வருவதாக மலாலா தெரிவித்துள்ளார்.
ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள் இருந்த வரை தாலிபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரிக்காமலிருந்தது. ஆனால், எப்போது அங்கிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கினார்களோ அப்போதை ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகளில் தாலிபான்கள் இறங்கிவிட்டனர்.
பலம் வாய்ந்த தாலிபான்களால் வெறும் சில வாரங்களில் ஆப்கனை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அதிபராக இருந்த அஸ்ரப் கானி ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் புகுந்தார்.

ஆப்கனில் தாலிபான்கள்
ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, பல ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற முயன்று வருகின்றனர். கடந்த 1996 - 2001 வரையிலான தாலிபான்கள் ஆட்சியிலிருந்த அடக்குமுறைகளே அனைவரது நினைவிற்கும் முதலில் வந்தது. அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கான உரிமை முற்றிலுமாக மறுக்கப்பட்டது. பள்ளி செல்வது, வேலைக்குச் செல்வது போன்ற அடிப்படை உரிமைகள் கூட பெண்களுக்கு வழங்கப்படவில்லை. இருப்பினும், இந்த முறைப் பெண்களுக்கான உரிமையை உறுதி செய்யும் வகையில் ஆட்சி இருக்கும் எனத் தாலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.

பெண் உரிமை
ஆனால், தாலிபான்களின் செயல்பாடுகள் இதற்கு நேர்மாறாக உள்ளது. வீடுகளை விட்டு வெளியே வரும்போது புர்கா அணிந்திருக்க வேண்டும் என அறிவித்துள்ள தாலிபான்கள், ஆண் துணை இல்லாமல் பெண்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஆண் பெண் இருபாலர் இணைந்து படிக்கும் கல்வி முறைக்கும் தடை விதித்துள்ளனர். இந்தச் சூழலில் பாகிஸ்தானில் பெண் உரிமைக்காகக் குரல்கொடுத்து தாலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட மலாலா, தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட மலாலா
கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி, பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த மலாலா மீது தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் ஒரு குண்டு மலாலாவின் இடது கண்ணிற்கு மேற்புறம் துளைத்துச் சென்றது. அவரது மண்டையோட்டை ஊடுருவிச் சென்ற அந்த துப்பாக்கிக் குண்டு, மலாலாவின் நரம்பு மண்டலத்தையும் மூளையின் ஒரு பகுதியையும் சேதப்படுத்தியது. இப்போது பிரிட்டனில் வசிக்கும் மலாலாவுக்கு இந்தத் தாக்குதல் குறித்த நினைவுகள் எதுவும் இல்லை. இதனால் அன்று என்ன நடந்தது என்பது குறித்து அறியத் தனது பள்ளித் தோழியைக் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்பு கொண்டு பேசியதாக மலாலா குறிப்பிட்டுள்ளார்.

அமைதியாக எதிர்கொண்டாய்
9 ஆண்டுகளுக்கு முன் தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது இந்தத் தோழி தான் மலாலா அருகிலிருந்தவர். 'தாலிபான்கள் என்னை நோக்கிச் சுட்ட போது நான் கத்தினேனா? பயந்து ஓடினேனா?' என்று தோழியிடம் மலாலா கேட்டுள்ளார். அதற்கு மலாலாவின் தோழி, "இல்லை. உனது பெயரைக் கூறி தாலிபான் பயங்கரவாதிகள் அழைத்த போது நீ அமைதியாக அவர்களை எதிர்கொண்டாய். அப்போது நீ எனது கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு இருந்தாய். அந்த வலி பல நாட்கள் எனக்கு இருந்தது.

வெள்ளை நிற பஸ் சிவப்பானது
துப்பாக்கியால் சுடத் தொடங்கியதும் நீ உனது கைகளால் முகத்தை மூடிக்கொண்டாய். ஒருநொடியில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. ரத்த வெள்ளத்தில் நீ என் மடியில் விழுந்தாய். வெள்ளை நிறத்தில் இருக்கும் நமது பள்ளி பேருந்து உனது ரத்தத்தால் சிவப்பு நிறத்தில் மாறியது" என்று தனது தோழி கூறியதாக மலாலா பதிவிட்டுள்ளார். அன்று நடந்த சம்பவம் குறித்து தனக்கு எந்த நினைவும் இல்லை. ஆனால், அந்த மோசமான நினைவுகள் தனது தோழியை இப்போது வரை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவச் சிகிச்சை
தொடர்ந்து மலாலா, "எனது உயிரைக் காப்பாற்ற பெஷாவரில் மருத்துவமனையில் எனது இடது மண்டை எலும்பு அகற்றப்பட்டது. எனது உயிரைக் காப்பாற்றியதில் இது முக்கிய பங்கு வகித்தது. முதலில் இஸ்லாமாபாத் மருத்துவமனைக்கும் பின்னர் இங்கிலாந்து மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டேன். கண் விழித்த போதுதான். நான் உயிருடன் இருக்கிறேன் எனச் சற்று நிம்மதி ஏற்பட்டது. இடைப்பட்ட நாட்களில் நான் கோமாவில் இருந்ததால் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்த போது என்னைச் சுற்றி வெளிநாட்டு மருத்துவர்கள் இருந்தனர்.
Recommended Video

புத்தக மேஜையில் மண்டை எலும்பு
பாகிஸ்தான் மருத்துவர்கள் எனது உயிரைக் காப்பாற்ற நீக்கிய மண்டை எலும்பை வயிற்றில் வைத்தார்கள். நான் குணமடைந்த பிறகு அந்த எலும்பை மீண்டும் தலையில் வைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் நோய்த் தொற்று ஏற்படும் என்ற வாய்ப்புள்ளதால் பின்னர் டைட்டானியம் தகட்டை எனது தலையில் வைத்து அறுவை சிகிச்சை செய்தனர். அந்த எலும்பு இப்போதும்கூட எனது புத்தக மேஜையில் தான் இருக்கிறது.

9 ஆண்டுகளாக
அந்த சமயத்தில் மக்கள் எனக்கு அளித்த ஆதரவு ஈடு செய்ய முடியாதது. அப்போது பொதுமக்கள் வீதிக்கு வராமல் இருந்திருந்தால் எனக்கு இந்த மருத்துவச் சிகிச்சை கிடைத்திருக்காது. நான் இப்போது உயிருடனும் இருந்திருக்க முடியாது. 9 ஆண்டுகள் கழித்து நான் இன்னும் தாலிபான்களின் அந்த ஒற்றை துப்பாக்கி தோட்டாவிலிருந்து மீண்டு வர முயல்கிறேன். ஆப்கானிஸ்தான் மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக இதேபோல மில்லியன் கணக்கான துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications