"என்ன தவம் செஞ்சுபுட்டோம்".. தாயில்லாத வாத்துகள்! சகோதரனாக மாறிய 'பாசக்கார' நாய்! நெகிழ்ச்சி வீடியோ
லண்டன்: தாயில்லாத வாத்துக் குஞ்சுகளுக்கு ஒரு குட்டி நாய் சகோதரனாக மாறி அவற்றுடன் சேர்ந்து விளையாடி அவற்றை தூங்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகில் நடக்கும் சில நிகழ்வுகளை பார்க்கும் போது மனிதர்களை விட மிருகங்கள் எவ்வளவோ மேல் என நம்மை நினைக்க வைத்து விடுகிறது. மனிதநேயத்துக்கு விலை என்ன என்று கேட்கும் அளவுக்குதான் இன்று மனிதர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
சொத்துக்காக தாய் - தந்தையை கொலை செய்யும் மகன்; கள்ளக்காதலனுக்காக தனது குழந்தைகளையே கொலை செய்யும் தாய் என மனிதர்களின் அக்கிரமம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தெருவுல நடந்தா கீழ்த்தரமாக பேசுவாங்க! ஸ்காலர்ஷிப் கூட கிடைக்காது! இந்தி அனுபவங்களை பகிர்ந்த நிர்மலா!
அன்பில் வியக்க வைக்கும் மிருகங்கள்..
ஒருபுறம், மனிதர்களின் நிலைமை இப்படி சென்று கொண்டிருக்க, மறுபுறம் மிருகங்களிடம் அன்பும், பாசமும் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது. காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தனது முதலாளியை, தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய நாய்; தாய் இல்லாத பூனைக் குட்டிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் நாய் என இதற்கான உதாரணத்தை சொல்லிக் கொண்டே போகலாம். இதுபோன்ற வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றன.
அதுபோன்ற ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாயை இழந்த வாத்துக் குஞ்சுகள்..
பிரிட்டனில் உள்ள கோட்ஸ்வால்ட் பிராந்தியத்தில் ஸ்டேன்டான் என்ற அழகிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதியவர், கால்நடை பண்ணை ஒன்றை வைத்துள்ளார். இங்கு ஆடுகள், கோழிகள், வாத்துகள் முதலியவை வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, அங்குள்ள ஒரு வாத்து சில வாரங்களுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்துவிட்டது. இதனால் அந்த வாத்தின் 7-க்கும் மேற்பட்ட குஞ்சுகள் அநாதையாகின. இதனால் வாத்துக் குஞ்சுகளுக்கு உணவை ஊட்டிக் கொடுத்து அந்த முதியவர்தான் பரமாரித்து வருகிறார்.
சகோதரனாக மாறிய நாய்
தாயுடன் விளையாடுவதை போல தங்களுடன் விளையாட மற்ற வாத்துகள் அந்த குஞ்சுகளை அனுமதிக்கவில்லை. இதனால் அந்த குஞ்சுகள் சில நாட்களுக்கு சோகமாகவே காணப்பட்டன. இந்நிலையில், அந்த முதியவர் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க் குட்டி ஒன்று, வாத்துக் குஞ்சுகளின் சோகத்தை புரிந்துகொண்டதோ என்னவோ தெரியவில்லை, அவற்றுடன் சேர்ந்து விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டது. இதனால் தாயுடன் விளையாடுவது போல அந்த நாய்க் குட்டியுடன் வாத்துக் குஞ்சுகள் விளையாடி வருகின்றன. நாய்க்குட்டி எங்கு சென்றாலும் வாத்துக் குஞ்சுகளும் பின்னால் சென்று விடுகின்றன.
நாய்க் குட்டி மீது ஏறி ஆட்டம்..
அந்த வகையில், நாய்க் குட்டியுடன் இந்த வாத்துக் குஞ்சுகள் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அந்த நாய்க் குட்டி சற்று ஓய்வெடுப்பதற்காக அங்குள்ள மணல் திட்டை தோண்டி அதில் படுத்துக் கொள்கிறது. உடனே அந்த வாத்துக் குஞ்சுகளும் அந்த நாய்க் குட்டியின் மீது ஏறி படுத்துக் கொண்டும், ஆட்டம் போட்டுக் கொண்டும் இருக்கின்றன. நாய்க் குட்டியின் முகம், கண்கள், அதன் உடல் என அனைத்து இடங்களிலும் வாத்துக் குஞ்சுகள் ஏறி நின்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த நாய்க் குட்டி அதனை கொஞ்சம் கூட தொந்தரவாக நினைக்காமல், அந்தக் குஞ்சுகளை விளையாட அனுமதிக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.