நெகிழ வைத்த நெட்பிளிக்ஸ், யூடியூப்.. தானாக முன்வந்து தங்களையே 'உருக்கின'.. ஐரோப்பா மக்களுக்காக!
லண்டன்: நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து, கூகுளின், யூடியூப் இணையதளமும் தனது மனிதாபிமான கரங்களை ஐரோப்பிய நாடுகள் மீது நீட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆன்லைன் நிறுவனமும், அதிலும் குறிப்பாக, வீடியோ சேவைகள் வழங்கும் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் சேவைதான் மிக மிகத் துல்லியமானது என்பதை காட்டி விளம்பரம் செய்துதான் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வர்.
இப்படி மிக மிக துல்லியமான வீடியோ ஒளிபரப்புக்கு, அதிகப்படியான இணையதள நுகர்வு அவசியம். ஆனால் இந்த விஷயத்தில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூட்யூப் ஆகிய இரண்டு வீடியோ வழங்கும் நிறுவனங்களும், ஐரோப்பிய நாடுகளில் தங்களது குவாலிட்டி குறைத்துக் கொள்வதற்கு தானாக முன்வந்து உள்ளன. சரியாக சொன்னால், தங்களை, தாங்களே உருக்கிக் கொள்ள முன்வந்துள்ளன.
கொரோனா பாதிப்பு குறையவில்லை.. பொய் சொல்கிறது சீனா.. உள்ளூர் மீடியாவில் வெளியான பகீர் தகவல்
மனிதாபிமானம்
இதன் பின்னணியில், மனிதாபிமானத்தின் மெல்லிய போர்வை படந்து கிடக்கிறது. என்ன என்று கேட்கிறீர்களா? இத்தாலி, பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளையும் கொரோனா வைரஸ், மிகக் கடுமையாக பாதித்து வருகிறது. எனவே பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அரசுகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் வீடுகளில் இருக்கக் கூடிய பொதுமக்கள் அங்கிருந்தபடி இணையதளத்தை பயன்படுத்தி வேலை பார்க்கிறார்கள். சில கல்வி நிறுவனங்கள், தொலைதூரத்திலிருந்து கல்வியை இணைய தளம் வாயிலாக கற்றுத் தருகின்றன.
அதிக வீடியோ நுகர்வு
இதுபோக, வீட்டிலேயே முடங்கி இருப்பவர்கள், பொழுதுபோக்குக்காக இணையதளத்தின் மூலமாக அதிக வீடியோக்களை பார்க்கிறார்கள். கேம்களை டவுன்லோட் செய்கிறார்கள். நிலைமை இப்படியே சென்று கொண்டிருந்தால், இணையதள சேவை மீது அதிக பாரம் ஏற்படும். அப்படி அதிக பாரம் ஏற்பட்டால் அது முடங்கிப் போக வாய்ப்பு இருக்கிறது.
பாதிப்பு கூடாது
அப்படி, ஒரு நிலை வந்தால் வீட்டிலிருந்து வேலை பார்ப்போர், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொழில் தொடர்ந்து நடத்திக்கொண்டு இருப்போர், கல்வி கற்போர் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுவார்கள். எனவேதான் நெட்பிளிக்ஸ் தனது குவாலிட்டியை குறைக்க முன்வந்தது. இன்று யூடியூப் இணையதளமும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாதிக்காது
இதன்மூலம் இணையதள சேவை முடங்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். அதே நேரம், மிக அதிகமான ஜிபி கொண்ட ஃபைல்களை டவுன்லோட் செய்வது முடியாது. இதனால் பொழுதுபோக்கிற்காக, இணையத்தை பயன்படுத்துவோருக்கு கஷ்டம்தான் என்ற போதிலும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படும். மெயில் அனுப்புவது உள்ளிட்டவற்றுக்கு பாதிப்பு வராது.
மனிதம்
தங்களுடைய நிறுவனத்தின் பெயர் தற்காலிகமாக கெட்டாலும் பரவாயில்லை, மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிறுவனங்கள் இவ்வாறு தங்கள் ஒளிபரப்பின், துல்லியத்தன்மையை, குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளன. கண்டிப்பாக, இந்த மனிதாபிமான செயல் பாராட்டப்பட வேண்டியது. மனித குலம் பார்த்து வரும் மிகப்பெரிய பாதிப்பை சமாளிக்க தனியார் நிறுவனங்களும் கை கோர்த்துள்ளது வரவேற்கப்பட வேண்டியது.