பிரதமர் ஆனதும்.. தமிழ்ப்பெண்ணுக்கு "மீண்டும்" முக்கிய பதவி தந்த ரிஷி சுனக்.. யார் இந்த சுயெல்லா?
லண்டன்: லிஸ் டிரஸின் ஆட்சியில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த இந்திய வம்சாவளியான சுயெல்லா பிரேவர்மேன் தற்போது உள்துறை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக ரிஷி சுனக் தேர்வாகியுள்ள நிலையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
முன்னதாக அரசாங்க கோப்புகளை அனுப்ப தனது தனிப்பட்ட இமெயில் அக்கவுன்டை பயன்படுத்தியதாக சுயெல்லா மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அதை ஒப்புக்கொண்டு அவர் ராஜினாமா செய்தார்.

பொருளாதார சரிவு
பிரிட்டனில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தற்போது கடும் நெருக்கடியை சந்திருக்கிறது. குறிப்பாக, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியது, அதனையடுத்து கோரோனா பெருந்தொற்று, தற்போது ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற காரணங்களால் அந்நாட்டு பொருளாதாரம் சரியத் தொடங்கியுள்ளது. மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ள நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தொடர் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

விமர்சனம்
இந்த முயற்சிகளில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். பொருளாதார மீட்பு நடவடிக்கையில் லிஸ் டிரஸ் தனது சொந்த கன்சர்வேடிவ் கட்சியின் எம்பிக்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இதனையடுத்து சுயெல்லாவும் தனது விமர்சனத்தை வெளிப்படையாக வைத்திருந்தார். லிஸ் ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர்தான் சுயெல்லா பிரேவர்மேன். ஏற்கெனவே போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்த காலத்தில் பிரிட்டனின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அரசாங்க கோப்புகளை அனுப்ப தனது தனிப்பட்ட இமெயில் அக்கவுன்டை பயன்படுத்தியதாக சுயெல்லா மீது குற்றம்சாட்டப்பட்டது.

வெளியுறவுத்துறை செயலாளர்
இது பாதுகாப்பு விதி மீறலாகும். இதனையடுத்து இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுயெல்லா உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அப்போது "நான் தவறு செய்துவிட்டேன். எனவே அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மணி ராஜினாமா செய்தது பரபரப்பாக பேசப்பட்டது. இவ்வாறு இருக்கையில் தற்போது புதிய பிரதமராக ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய அரசாங்கத்தில் சுயெல்லா பிரேவர்மேன் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்ப்பு
சுயெல்லாவின் தாயார் தமிழ்நாட்டை சேர்ந்தவராவார். தந்தை கோவாவை சேர்ந்தவர். இந்நிலையில் சுயெல்லா தற்போது மீண்டும் உள்துறை அமைச்சகத்தில் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பாதுகாப்பு விதி மீறல் தொடர்பாக பதவி விலகிய சுயெல்லாவை மீண்டும் 'உள்துறை செயலாளராக' கொண்டு வந்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த பொருளாதார தவறை சரி செய்ய வேண்டிய இடத்தில் சுனக் இருக்கும் நிலையில் இந்த விமர்சனங்கள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications