இந்திய மாணவியின் குடியுரிமையை ரத்து செய்த பிரிட்டிஷ் அரசு.. முடிவுக்கு எதிராக கிளம்பும் குரல்கள்
Recommended Video
லண்டன் : பிரிட்டனில் இருந்து இந்தியாவில் தன்னுடைய ஆய்விற்காக ஏறக்குறைய ஒரு வருடங்களை செலவழித்த பிரிட்டனின் காம்பிரிட்ஜ் பல்கலைகழக ஆய்வு மாணவியின் நிரந்தர குடியுரிமையை பிரிட்டன் அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களாக பிரிட்டனின் நிரந்தர குடியுரிமையை வைத்துள்ள இந்திய மாணவி, ஆசியா இஸ்லாம், தன்னுடைய ஆய்விற்காக இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக நாட்களை செலவழித்ததாக பிரிட்டனின் உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து வரும் ஜனவரி மாதம் அவர் பிரிட்டனை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் அரசின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, பிரிட்டனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் தங்களது கையொப்பமிட்ட கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இந்திய மாணவி
கடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டனின் நிரந்தர குடியுரிமையை பெற்று அங்கு வசித்துவரும் 31 வயதான ஆசியா இஸ்லாம், தன்னுடைய ஆய்விற்காக இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு ஆண்டுகள் தங்கி தன்னுடைய களப்பணியை மேற்கொண்டிருந்தார்.
மாணவி வெளியேற உத்தரவு
பிரிட்டனை பொருத்தவரை, அங்கு குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர், தொடர்ந்து 180 நாட்களுக்கு மிகாமலும், 10 ஆண்டுகளில் 540 நாட்களுக்கு மிகாமலும் வெளிநாட்டில் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், இதை ஆசியா மீறியதால், அவர் வரும் ஜனவரியுடன் அங்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விளக்கத்தை ஏற்காத பிரிட்டன் அரசு
கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டனை விட்டு வெளிநாடுகளில் 647 நாட்கள் தங்கியதாகவும் அதில் தன்னுடைய ஆய்விற்காகவே 330 நாட்களை செலவழித்ததாகவும் ஆசியா அரசுக்கு விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட கால அளவை அவர் மீறியதாக பிரிட்டன் அரசு தெரிவித்து அவரது விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளது.
ஆய்வுப்பணியில் ஆசியா
இந்திய நகரங்களின் புதிய பொருளாதார நிலை குறித்த தன்னுடைய ஆய்வை கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின்கீழ் செயல்படும் நியூஹாம் கல்லூரியில் மேற்கொண்டுவரும் ஆசியா, இதற்கான களப்பணிக்காக ஏறக்குறைய ஒரு வருடம் இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் செலவழித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் அறிவிப்பு
இளநிலை ஆய்வு மாணவியான ஆசியா, தன்னுடைய ஆய்வுப்பணியை கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அவரது ஆய்விற்கு களப்பணி மிகவும் முக்கியமானது என்று அந்த பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பிரிட்டன் அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு நன்மையே ஏற்படும் என்றும் கூறியுள்ளது.
பல்கலைகழக துறைத்தலைவர் கருத்து
இந்நிலையில் பிரிட்டனின் இத்தகைய குடியேற்ற கொள்கைகள் மிகவும் மூர்க்கத்தனமானது என்று ஆசியா பயின்றுவரும் கல்லூரியின் சமூகவியல் துறைத்தலைவர் சாரா பிராங்க்ளின் கருத்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரிட்டன் அரசு பாதுகாக்க நினைக்கும் கல்லூரிகளுக்கு தீங்கே ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிரந்தர குடியுரிமை ரத்து
31 வயதான ஆசியா இஸ்லாமின் பூர்வீகம் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டனின் நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ள நிலையில், இவரது குடியுரிமை காலம் வரும் ஜனவரியுடன் நிறைவடைய உள்ளதால், அவரது நிரந்தர குடியுரிமையை ரத்து செய்துள்ள பிரிட்டன் அரசு, தற்போது அவரை ஜனவரிக்குள் நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் ஆதரவு கையெழுத்து
இந்நிலையில், ஆசியாவிற்கு எதிரான பிரிட்டன் அரசின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி, அங்குள்ள பல்வேறு பல்கலைகழகங்களின் ஆய்வு மாணவர்கள் தங்களது கையெழுத்துக்களை இட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் பிரிட்டனின் இந்த நடவடிக்கையை பரிசீலிக்க ஆசியாவும் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.