இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்
லண்டன்: இந்தியாவில் முதல் கண்டறியப்பட்ட B 1.617.2 உருமாறிய கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசிகளின் செயல்திறன் குறையலாம் என்று பிரிட்டன் நாட்டின் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
பிரிட்டன் நாட்டில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு இறுதி முதலிலேயே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை
அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் பிரிட்டன் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
எச்சரிக்கை தேவை
இது குறித்து தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் அந்தோனி ஹார்ண்டன் கூறுகையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் எந்தளவு வேகமாகப் பரவுகிறது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. எனவே, பிரிட்டன் நாட்டில் ஊரடங்கில் மிகவும் எச்சரிக்கையுடன் தளர்வுகளை அறிவிக்க வேண்டும்.
தடுப்பூசி செயல்திறன் குறையும்
அதேநேரம் 1.617.2 உருமாறிய கொரோனா தீவிரமான பாதிப்பை அதிகப்படுத்தும் என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை. கொரோனா தடுப்பூசிகள் லேசான உருமாறிய கொரோனா பாதிப்புகளுக்கு எதிராகக் குறைவான செயல்திறனைக் கொண்டிருக்கலாம். ஆனால், எந்த உருமாறிய கொரோனாவாக இருந்தாலும் தீவிர பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பூசிகள் கட்டுப்படுத்தும். அதேநேரம் தடுப்பூசி செயல்திறன் குறைவதால், வைரஸ் பரவலைத் தடுப்பூசிகளால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்" என்று அவர் தெரிவித்தார்.
போரிஸ் ஜான்சன்
முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இதே கருத்தையே முன் வைத்திருந்தார். அவர் கூறுகையில், "இந்த 1.617.2 உருமாறிய கொரோனா வேகமாகப் பரவுகிறது. இருப்பினும், எந்தளவு வேகமாகப் பரவுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவை தடுப்பூசிக்குக் கட்டுப்படும் என்றே தற்போது வரை வெளியான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே, தற்போதைய சூழலில் அதிகளவிலான மக்களுக்கு நாம் தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும்" என்றார்.
பிரிட்டன் கொரோனா பாதிப்பு
கடந்த வாரம் பிரிட்டன் நாட்டில் 520 பேருக்கு மட்டுமே இந்த 1.617.2 உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது இந்த எண்ணிக்கை 1,313ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தின் வட மேற்கு பகுதிகளிலும், லண்டன் பகுதிகளிலும் 1.617.2 உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாகப் பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.