"துணிவுடன்" இறங்கினேன்! 25 தாலிபான்களை கொன்றேன்! சர்ச்சையை கிளப்பிய இளவரசர் ஹாரி! கிளம்பிய எதிர்ப்பு
லண்டன்: பிரிட்டன் இளவரசர் ஹாரி, தான் ராணுவத்தில் ஆப்கனில் இருந்த போது நடந்த நிகழ்வுகள் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது சர்வதேச அளவில் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பிரிட்டன் அரசு குடும்பத்தில் மன்னர் சார்ல்ஸ்- டயனாவின் இளைய மகன் ஹாரி. பிரிட்டன் அரசு குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்த வந்த இவர், கடந்தாண்டு அரசு குடும்பத்தில் இருந்து விலகி அதிர்ச்சி கொடுத்தார்.
இப்போது தனது மனைவி மேகன் உடன் இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். விரைவில் வெளிவர இருக்கும் அவரது ஸ்பேர் புத்தகத்தில் தனது வாழ்க்கையில் நடந்த பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரிட்டன் ராஜ குடும்பத்தில் பூகம்பம்.. இளவரசர் வில்லியம் என்னை அடித்தார்! இளவரசர் ஹாரி குறிப்பு லீக்
இளவரசர் ஹாரி
பிரபல ஆங்கில புத்தகமான தி டெலிகிராப் நிறுவனத்திற்கு இந்த புத்தகத்தின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. அதில் அவர் தனது ராணுவ அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார். 38 வயதான ஹாரி 2007-2008 ஆண்டுகளில் பிரிட்டிஷ் ராயல் ராணுவத்தில் பார்வர்டு விமானக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றினார்.. மேலும், 2012-2013க்கு இடையில் தாக்குதல் ஹெலிகாப்டர் குழுவிலும் அவர் இடம் பெற்றிருந்தார். அப்போது சில வாரங்கள் அவர் ஆப்கானிஸ்தானிலும் பணியமர்த்தப்பட்டு இருந்தார். அப்போது நடந்த அனுபவங்கள் குறித்து அவர் தனது ஸ்பேர் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
25 தாலிபான்கள்
தாலிபான் உறுப்பினர்களைச் சாதாரண மக்களாகப் பார்க்கக் கூடாது ராணுவம் தனக்குக் கற்றுக் கொடுத்ததாக ஹாரி அந்த புத்தகத்தில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "இந்த நவீன யுகத்தில் டெக்னாலஜி துணை இருப்பதால் என்னால் களத்தில் எத்தனை பயங்கரவாதிகளைக் கொல்ல முடிந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது.. இதைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை என்றே எனக்குத் தெரிகிறது. நான் ஆப்கனில் இருந்த போது 25 தாலிபான்களை தாக்குதலில் கொன்றுள்ளேன். இதை நினைத்து எனக்கு எந்தவொரு பெருமையும் இல்லை... அதேநேரம் எந்தவொரு வெட்கமும் இல்லை.
மனிதர்களே இல்லை
தாலிபான்கள் சாதாரண மனிதர்கள் இல்லை.. அவர்கள் திட்டமிட்டுக் காய் நகர்த்தும் சதுரங்கக் காய்கள் என்ற எண்ணத்தை ராணுவம் எனக்குக் கொடுத்தனர். நான் ராணுவத்தில் இருந்த போது, சரியானதைச் செய்தேனா என்ற சந்தேகத்துடன் படுக்கைக்குச் சென்றது இல்லை.. தாலிபான்களை மட்டுமே கொன்றேன்.. பிரிட்டனைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் நாடு திரும்ப வேண்டும் என்பதே விருப்பம்.. அனைத்து வீரர்களும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது" என்று அவர் கூறியிருந்தார். தாலிபான்களை கொன்றது குறித்த அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
எதிர்ப்பு
பிரிட்டன் ராணுவத்தைச் சேர்ந்த பலரும் கூட ஹாரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ராணுவத்தில் நடந்த செயல்பாடுகளை இப்படி வெளிப்படையாகச் சொல்லியுள்ளதன் மூலம் ஹாரி, தனது சொந்த பாதுகாப்பைப் பணயம் வைத்து தன்னை ஒரு இலக்காக ஆக்கிக்கொண்டார் என்று பலரும் எச்சரித்தனர். ராணுவத்தில் எத்தனை பேரைக் கொன்றார் என்பது குறித்த தகவல்களை அவர் பகிர்ந்து கொள்ளாமல் இருந்து இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தாலிபான்கள் பதிலடி
இதனிடையே இது குறித்து தாலிபான் தரப்பில் இருந்தும் பதிலடி வந்துள்ளது. தாலிபான்களின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் கஹர் பால்கி, "ஆப்கானிஸ்தானின் மேற்கத்திய ஆக்கிரமிப்பு என்பது மனித வரலாற்றில் ஒரு வெறுக்கத்தக்கத் தருணம்.. மேலும் இளவரசர் ஹாரியின் கருத்துக்கள் என்பது ஆப்கான் மக்கள் அனுபவித்த அதிர்ச்சியின் ஒரு சிறிய சாட்சி. ஆக்கிரமிப்புப் படைகள், எந்தப் பொறுப்பும் கூறாமல் அப்பாவிகளைக் கொன்றனர்.
மோசம்
உங்கள் ராணுவ வீரர்கள், அரசியல் தலைவர்களுக்கு எங்கள் அப்பாவி மக்களைச் சதுரங்கக் காய்களாகவே இருந்தனர். இருப்பினும், இந்த சதுரங்க விளையாட்டில் நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்கள்.. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உங்கள் மீது விசாரணை நடத்தும். அல்லது மனித உரிமை ஆர்வலர்கள் உங்களைக் கண்டிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் அவர்கள் காது கேளாதவர்களாகவும் பார்வையற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் இந்த கொடுமைகள் மனிதக்குல வரலாற்றில் நினைவுகூரப்படும் என்று நம்புகிறேன்" என்று சாடியுள்ளார்.
தாலிபான் கமாண்டர்
அதேபோல தாலிபான் கமாண்டர் மொலவி ஆகா கோலும் ஹாரியை சாடியுள்ளார். ஹாரியை தோற்றுப் போன நபர் என்று குறிப்பிட்ட மொலவி ஆகா கோல், போர்க் களத்திற்குச் செல்லவே பயந்தவர் ஹாரி என்றும் அவரையும் பிரிட்டன் ராணுவத்தையும் எங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றி வரலாறு படைத்தோம் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் கோபத்தில் அவர் இதுபோல எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.