"டோட்டல் டேமேஜ்.!" 10 வயது குழந்தைகளுக்கான கணித தேர்வில் பெயில்.. தர்மசங்கடத்தில் விழித்த எம்பிக்கள்
லண்டன்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற பிரிட்டன் எம்பிக்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், இப்போது மிகப் பெரிய தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளனர்.
பொதுவாக அரசியல்வாதிகள் எப்போதும் லைம்லைட்டில் இருக்கவே ஆசைப்படுவார்கள். அதேநேரம் எதாவது மோசமான விஷயங்களில் அவர்களின் பெயர் சிக்கினால், அது அவர்களின் இமேஜை டோட்டலாக காலி செய்துவிடும்.
அப்படியொரு மோசமான சம்பவம் தான் பிரிட்டன் அரசியல்வாதிகளுக்கு நடந்துள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று கடைசியில் பெரிய தர்ம சங்கடத்தில் அவர்கள் சிக்கியுள்ளனர்.
பாஜகவுக்கு பேரழிவு.. டெல்லி, இமாச்சல் தேர்தல் தோல்வியால் சு.சாமி கடும் கோபம்..மோடி மீது ‛அட்டாக்’
தேர்வு
எப்போதும் தேர்வுகள் என்றால் மாணவர்களுக்குப் பயம் தான். வளர்ந்த பிறகும் கூட தேர்வு என்றால் அலறுபவர்கள் பலரும் கூட இருக்கவே செய்கிறார்கள். இதுபோன்ற தேர்வுகள் மாணவர்கள் மத்தியில் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்தியாவில் உள்ளதைப் போலவே பிரிட்டன் நாட்டிலும் ஏகப்பட்ட தேர்வுகள் உள்ளன. அங்கும் கூட சிறு வயது முதலே மாணவர்கள் ஏகப்பட்ட தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த தேர்வுகள் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது.
அரசியல்வாதிகள்
இதன் காரணமாகப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் தேவையில்லாத தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அங்குள்ள மோர் தேன் ஏ ஸ்கோர் என்ற அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்த அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி பிரிட்டன் நாட்டில் உள்ள எம்பிக்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. அதுவும் 10-11 வயது மாணவர்களுக்கான தேர்வுகள் தான் நடத்தப்பட்டன.
இரண்டு டெஸ்ட்
இதில் எம்பிக்கள் அரசியல்வாதிகள் என மொத்தம் 13 பேர் பங்கேற்றுத் தேர்வெழுதினர். இவை முழுமையான தேர்வு சூழலில் நடத்தப்பட்டது. மாணவர்களுக்குத் தேர்வு எழுதும்போது கடைப்பிடிக்கப்படும் விதிகளே இதிலும் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆங்கிலம் மற்றும் கணித தேர்வை இவர்கள் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் இப்போது வெளியாகி உள்ள நிலையில், இது அங்குள்ள அரசியல்வாதிகளுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
பெயில்
10 வயதுக் குழந்தைகளுக்கான தேர்வுகளில் கூட அரசியல்வாதிகளால் பாஸாக முடியவில்லை. கணித தேர்வில் மொத்தமே 44% பேர் மட்டுமே எதிர்பார்த்த மார்க்கை பெற்றுள்ளனர். அதேபோல ஆங்கிலத்தில் வெறும் 50% அரசியல்வாதிகள் மட்டுமே எதிர்பார்த்த மார்க்கை பெற்றுள்ளனர். ஓர் ஓப்பீட்டிற்கு சொல்ல வேண்டும் என்றால் இதே தேர்வில் மாணவர்களில் சுமார் 60-65% பேர் அரசியல்வாதிகளைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
ரொம்பவே மோசம்
ஒவ்வொரு அரசியல்வாதியும் எத்தனை மார்குகள் வாங்கியுள்ளனர் என்பது குறித்த தனித்தனி டேட்டா வெளியிடப்படவில்லை என்றால் ரிசல்ட் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் எனப் பார்த்துக் கொள்ளுங்கள். தேர்வுகள் தேவையில்லை என்பதை உணர்த்தவே மோர் தேன் ஏ ஸ்கோர் அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இருப்பினும், தேர்வுகளை ஒட்டுமொத்தமாக நீக்க அரசியல்வாதிகள் சம்மதிக்கவில்லை. இருப்பினும், தேர்வுகளின் சமயத்திலும் மாணவர்கள் அதிக அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது புரிவதாகத் தெரிவித்தனர்.
அழுத்தம்
இது தொடர்பாக அந்நாட்டின் கல்வித் தேர்வுக் குழுத் தலைவர் ராபின் வாக்கர் கூறுகையில், "இது கடினமான தேர்வு தான் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இது போன்ற தேர்வுகளில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை ஒப்புக் கொள்கிறோம். இருப்பினும், இவை நிச்சயம் மாணவர்களின் எதிர்காலத்திற்குப் பலன் அளிக்கும். தேர்வை முழுவதுமாக நீக்குவது சரியாக இருக்காது. மாணவர்களுக்குத் தேர்வை பாஸ் செய்வது எப்படி எனச் சொல்லித் தருவதை விட, கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்" என்றார்.
கொரோனா தாக்கம்
முன்னதாக கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டாலும் கூட அது முழு கற்றல் அனுபவத்தை மாணவர்களுக்குத் தரவில்லை. மேலும், வீடுகளிலேயே முடங்கி இருந்தது குழந்தைகளை மன ரீதியாகவும் கடுமையாகப் பாதித்தது. இதனால் இடைநிற்றலும் கூட அதிகரித்ததாகச் சொல்லப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு இப்போது பள்ளிகள் மெல்ல ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளில் மாணவர்களால் எதிர்பார்த்த மார்க்கை பெற முடிவதில்லை எனச் சொல்லப்படுகிறது.