நஞ்சை விதைத்த ஆபாச படம்.. அலறிய 7 வயது சிறுமி.. பலாத்காரம் செய்த 10 வயது சிறுவன்.. போக்சோவில் கைது
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

பாலியல்
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது, "கான்பூரில் இந்த சிறுமியின் குடும்பமும், சிறுவனின் குடும்பமும் வசித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் சிறுமியின் பெற்றோர்கள் வெளியில் சென்றுள்ளனர். சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த சிறுவன், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து வீடு திரும்பிய பெற்றோர் சிறுமி அழுது கொண்டிருப்பதை பார்த்து விசாரித்துள்ளனர்.

வழக்குப்பதிவு
சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் எங்களிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்கையில் சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். மேலும், தனது உறவினர் ஒருவரின் செல்போனில் ஆபாச படம் பார்த்த பின்னர்தான் இதுபோன்று நடந்துகொண்டதாகவும் சிறுவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான். இதனையடுத்து அவன் மீது கற்பழிப்பு மற்றும் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வலியுறுத்தல்
நீதிமன்ற உத்தரவையடுத்து சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்" என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தேசிய அளவில் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக அளவில் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. NCRB வெளியிட்ட தரவுகளின்படி கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் இம்மாநிலத்தில் 6,898 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான குற்றங்களை குறைக்க பாலியல் கல்வியையும், பாலியல் சமத்துவத்தையும் சிறு வயதிலிருந்தே கற்பிக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு இயங்கி வருகிறது. கடந்த 2020ஐ காட்டிலும் 2021ம் ஆண்டில் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றங்கள் குறைந்துள்ளதாக NCRB தெரிவித்திருக்கிறது. ஆனால் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications