காந்தி பொம்மையை துப்பாக்கியால் சுட்டு.. குரூர கொண்டாட்டம்.. பெண் உள்பட 13 பேர் மீது வழக்கு!
காந்தி உருவபடத்தை இழிவு செய்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

லக்னோ: மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை சுட்டு, தீ வைத்து கொளுத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக இந்து மகாசபா அமைப்பின் தலைவர் உள்பட 13 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆனால் உத்தரப் பிரதேசம் அலிகரைச் சேர்ந்த இந்து மகாசபா அமைப்பினர் மட்டும் இதனை இழிவாக செயல்படுத்தி காட்டினர்.
காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மீண்டும் ஒருமுறை அரங்கேற்றம் செய்தனர். இதற்காக காந்தியின் உருவ படம் முன்பு நின்று கொண்டு ஒரு துப்பாக்கியால் சுடுவது போல நடித்தனர்.

கோட்சேவுக்கு மாலை
இந்து மகாசபா அமைப்பின் தேசிய செயலாளர் பூஜா ஷாகுன் பாண்டே என்ற பெண்தான் துப்பாக்கியால் காந்தியை சுடுவது போல நடித்தார். அப்போது கூட இருந்த அந்த அமைப்பினர் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, காந்தியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.

இனிப்பு பரிமாற்றம்
இதனையடுத்து காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். இந்த வீடியோவை இணையத்திலும் பதிவிட்டனர்.

தீ வைத்து எரிக்கப்படும்
இது சம்பந்தமாக பூஜா பேசும்போது, 'தசரா பண்டிகையின் போது ராவணனின் உருவபொம்மையை எரிப்பது எப்படி வழக்கமாக இருக்கிறதோ இனி ஒவ்வொரு ஆண்டும் காந்தியின் நினைவு நாளில் அவரது உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து எரிப்பது வழக்கம் ஆக்கப்படும்' என்றும் தெரிவித்தார்.

13 பேர் மீது வழக்கு
இந்த வீடியோ வைரலானதை அடுத்து நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்து மகாசபை அமைப்பினருக்கு பலமான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, போலீசார் இந்த விவகாரத்தில் இறங்கினர். காந்தியை அவமானப்படுத்திய இந்து மகாசபா அமைப்பின் தேசிய செயலாளர் பூஜா ஷாகுன் பாண்டே உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஒருவரை மட்டும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications