5 ஆண்டுகளில் 166 குற்றவாளிகள் என்கவுண்டர்.. உ.பியில் எல்லை மீறும் போலீஸ்.. முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 166 குற்றவாளிகள் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது உத்தரபிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக இருப்பதாகவும் யோகி ஆதித்யநாத் கூறினார்.
இதனிடையே, உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டுமே கூறி வருவதாகவும், அதுபோன்ற உணர்வு பொதுமக்கள் யாருக்கும் ஏற்படவில்லை என்றும் சமாஜ்வாதி கட்சி விமர்சித்துள்ளது.

தேசிய காவலர் நினைவு தினம் லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு யோகி ஆதித்யநாத் பேசியதாவது: உத்தரபிரதேசம் என்றாலே ஒருகாலத்தில் மதக்கலவரங்களும், ஜாதி கலவரங்களும்தான் அனைவரின் நினைவுக்கும் வரும். முந்தைய ஆட்சியாளர்கள் இதுபோன்ற வன்முறைகளை அடக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆனால், எனது தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் - ஒழுங்கை காப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ரவுடிகள், சமூக விரோதிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர். பெண்களை கிண்டல் செய்பவர்களையும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களையும் தடுப்பதற்கு தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு என்பதை சமூக விரோதிகளின் மனதில் விதைப்பதுதான் எனது முதல் குறிக்கோளாக இருந்தது. எனவே, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறைக்கு நான் முழு சுதந்திரம் அளித்தேன். போலீஸார் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இன்று உத்தரபிரதேசம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 166 பயங்கர குற்றவாளிகள் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். 4,453 குற்றவாளிகள் படுகாயமடைநத்னர். இந்த நடவடிக்கைகளின் போது 13 காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்து வருகிறது. குற்றவாளிகளே இல்லாத உத்தரபிரதேசம் தான் எனது லட்சியம். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.
சமாஜ்வாதி விமர்சனம்
இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்தப் பேச்சை சமாஜ்வாதி கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், "உத்தரபிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கிறது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டும் தான் கூறி வருகிறார். ஆனால் பொதுமக்கள் அவ்வாறு கூறவும் இல்லை; உணரவும் இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை, பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன்முறை என உத்தரபிரதேசத்தில் குற்றங்கள் அதிகரித்துதான் வருகிறன்றன" எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications