"உங்கள் போராட்டம் வெல்லட்டும்".. திடீரென ராகுலுக்கு வாழ்த்து சொன்ன.. அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்!
லக்னோ: "நல்ல நோக்கத்திற்காக நீங்கள் நடைப்பயணம் மேற்கொள்கிறீர்கள். உங்கள் போராட்டம் வெற்றி பெறட்டும்" என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ' யாத்திரையை பாஜகவும், பல இந்துத்துவா அமைப்புகளும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகரே அவருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதனிடையே, அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்த விவகாரம் குறித்து பாஜக தலைவர்களிடம் கேட்ட போது, அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
4 மாநிலம்.. 1230 கி.மீ! 50வது நாளை எட்டியது ஒற்றுமை யாத்திரை! தெலங்கானாவில் ராகுல் இன்று நடைப்பயணம்
உ.பி.க்குள் நுழையும் ராகுல் காந்தி
நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாரத் ஜோடோ யாத்திரை 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, இன்று மதியம் உத்தரபிரதேச மாநிலத்திற்குள் நுழைகிறார். இந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்திற்குள் ராகுல் காந்தியின் நடைப்பயணம் நுழைவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர் 'மெசேஜ்'
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கிய நாள் முதலாகவே, பாஜகவும், பல இந்துத்துவாக அமைப்புகளும் அதை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனிடையே, கொரோனா பரவலை காரணம் காட்டி இந்த நடைப்பயணத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசு சார்பில் ராகுல் காந்திக்கு கடிதமும் எழுதப்பட்டது. இருந்தபோதிலும், தனது நடைப்பயணத்தை ராகுல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதுபோன்ற சூழலில்தான், அயோத்தி ராமஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ராகுல் காந்திக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
"உங்கள் நோக்கம் வெற்றி பெறட்டும்"
அந்தக் கடிதத்தில், "உயரிய நோக்கத்திற்காக நீங்கள் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறீர்கள். நாட்டு மக்கள் நலனுக்காகவும், அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் இந்த சிரத்தையை நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்கள் நல்ல நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ராமப்பிரானின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்" என அந்தக் கடிதத்தில் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.
பாஜக அதிருப்தி
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பாஜக தலைவர்களையும், நிர்வாகிகளையும் அதிருப்தி அடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், ராமருடன் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவர்கள் ஒப்பிட்டு பேசினர். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக, அயோத்தியில் ராமர் கோயிலை எழுப்பக்கூடாது என்று கூறிய ஒரு கட்சியின் தலைவரை ராமருடன் ஒப்பிடுவதா? என பாஜக தலைவர் கொந்தளித்து கருத்து தெரிவித்தனர். இந்த சூழலில், அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகரின் இந்த செயல் பாஜகவினரையும், வலதுசாரி அமைப்புகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.