உங்களால் தான் பாஜகவுக்கு கெட்ட பெயர்... யோகி ஆதித்யநாத்தை வெளுத்து வாங்கிய உமாபாரதி..!
லக்னோ: ஹத்ராஸ் வழக்கில் உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தவறான நிர்வாகத்தால் பாஜகவுக்கு தேவையின்றி அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான உமா பாரதி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் போலிஸார் ஆரம்பம் முதலே சந்தேகத்திற்கு உரிய வகையில் செயல்பட்டு வருவதாகவும் அதனை தடுக்க தவறியதன் விளைவாக பாஜகவின் பிம்பம் பதம் பார்க்கப்பட்டுள்ளதாகவும் உமாபாரதி தெரிவித்திருக்கிறார். சொந்தக் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் என்றாலும் ஒளிவு மறைவின்றி யோகி ஆதித்யநாத்தை வெளுத்து வாங்கியிருக்கிறார் உமா பாரதி.

ஹத்ராஸ் வழக்கை காங்கிரஸ் அரசியல் செய்வதாக பாஜகவினர் கூறி வரும் நிலையில் தனது மனதில் தோன்றிய கருத்தை பொதுவெளியில் போட்டுடைத்து விட்டார் உமாபாரதி. இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், முதலில் இப்படி கூற வேண்டாம் என்று தான் நினைத்தேன், ஆனால் என்னை இப்படி பேசும் நிலைக்கு தள்ளிவிட்டீர்கள் என யோகி மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தனக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் பாதிக்கப்பட்ட பெற்றோருடன் அவர்களது வீட்டில் அமர்ந்திருப்பேன் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய பின்னர் உறுதியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திப்பேன் என்றும் உமாபாரதி கூறியிருக்கிறார்.
உமாபாரதியின் இந்தக் கருத்தை பாஜகவில் பெரும்பாலானோர் ஆமோதித்துள்ளனர். தொடக்கத்திலேயே காவல்துறை செய்த குழப்பங்களையும், சந்தேகத்திற்கு உரிய நடவடிக்கைகளையும் கண்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பாஜக அரசு மீது தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம் என தனது மனக்குமுறலை கொட்டியுள்ளார்.
மேலும், இப்போதும் கெட்டுபோய்விடவில்லை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திக்க ஊடகவியலாளர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். உ.பி.அரசுக்கு எதிராக ஏற்கனவே போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், உமாபாரதியின் இந்தக் கருத்து யோகியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அரசுக்கும் தனக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து ஹத்ராஸ் வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர், துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் யோகி ஆதித்யநாத். இதனை அவர் முன்னரே செய்திருந்தால் உ.பி.யில் போராட்டத்தையும், பதற்றத்தையும் தவிர்த்திருக்கமுடியும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கிறார் யோகி.












Click it and Unblock the Notifications