காலையில் திருமணம்.. ஆனா.. ஈவ்னிங்கே "கொழுந்தனை" கரம்பிடித்த மனைவி.. ஏன் தெரியுமா? ஷாக் கணவன்
லக்னோ: திருமணம் நடந்த சில மணிநேரங்களிலேயே மணமகனின் தம்பியை மணமகள் கரம்பிடித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்தில் நடைபெற்ற பெரும் பஞ்சாயத்துக்கு பிறகு பெரியவர்கள் ஆசிர்வாதத்துடனே இந்த திருமணம் நடைபெற்றிருக்கிறது.
வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் திருமணங்களின் போது பல்வேறு கலாட்டாக்கள் ஏற்படுவதை கேள்விப்பட்டிருப்போம். மேடைக்கு மணமகன் வர தாமதமானதால் திருமணத்தை நிறுத்திய மணமகள், தனது நண்பர்களுடன் மணமகள் பேச மறுத்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் என்பன போன்ற செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த திருமண கலாட்டா அவற்றுக்கு எல்லாம் மேலே இருக்கிறது.
ச்சே என்ன மனுஷன்யா! நெட்டிசன்களை நெகிழ வைத்த ஷோரூம் இன்சார்ஜ்! அந்த குழந்தைகளின் கண்களை பாருங்களேன்
கோலாகலமாக நடந்த திருமணம்
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஹரியானா கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் யாதவ். இவருக்கும், தவாய்குர்ட் கிராமத்தைச் சேர்ந்தவருக்கும் இடையே நேற்று முன்தினம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இரு வீட்டாரும் பாட்டும், ஆட்டமுமாக மண்டபமே களைக்கட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களின் இந்த ஆட்டமும், பாட்டமும் வெகுநேரம் நீடிக்கவில்லை.
மைக்கில் பேசி அலறவிட்ட பெண்
மணமகனும், மணமகளும் மேடையில் ஆடிக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு பெண் கையில் குழந்தையுடன் மேடை ஏறினார். அவரை கண்டதும் மணமகனுக்கு உச்சி முதல் பாதம் வரை வியர்த்துக் கொட்ட தொடங்கியது. பின்னர், மேடையில் இருந்த மைக்கில் பேசிய அந்தப் பெண், "இதோ என் கையில் இருக்கும் குழந்தைக்கு இந்த மணமகன்தான் தந்தை" எனக் கூறி மேடையில் இருந்து இறங்கினார்.
முதல் திருமணத்தை மறைத்து..
அந்தப் பெண்ணின் பேச்சை கேட்டு ஒட்டுமொத்த மண்டபமும் மயான அமைதியாக மாறியது. இதையடுத்து, பெண் வீட்டார் இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டபோது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, இந்த புதுமாப்பிள்ளைக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே அப்பெண்ணுடன் திருமணம் நடந்திருப்பதும், பின்னர் கருத்து வேறுபாட்டால் அவர்கள் பிரிந்திருப்பதும் தெரியவந்தது.
மணமகன் தம்பியுடன் திருமணம்
இதையடுத்து, இரு வீட்டாருக்கும் இடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், மாப்பிள்ளை வீட்டார் மீது பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீஸார் தலையிட்டு நடத்திய பஞ்சாயத்தில், இந்த திருமணத்தை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. அப்போது மணமகள் போலீஸாரிடம், இந்த திருமணத்தை ரத்து செய்யுங்கள். ஆனால், நான் மணமனின் தம்பியை திருமணம் முடித்துக் கொள்கிறேன் எனக் கூறினார். இதனால் போலீஸார் உட்பட அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்கு மணமகனின் தம்பியும் சம்மதிக்கவே, இருவருக்கும் அதே மேடையில் திருமணம் நடைபெற்றது. காலையில் அண்ணனையும், மாலையில் அவரது தம்பியையும் பெண் திருமணம் செய்த சம்பவம் உ.பி.யில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.