உ.பி. சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் காங்.தனித்தே போட்டி- பிரியங்கா காந்தி அறிவிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். மேலும் சமாஜ்வாதி கட்சி அல்லது பகுஜன் சமாஜ் கட்சியுடன் தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைக்கப்போவது இல்லை என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைப்பதில் முனைப்பாக உள்ளது.
Orange Alert: கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன. பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், முதல்வர் யோகி ஆதித்யநாத் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார்.
காங். பொதுச்செயலாளர் பிரியங்கா
இந்த தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு எப்படியும் டபுள் டிஜிட் இடங்களைப் பிடித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்கிறது. தற்போதைய நிலையில் பிரியங்கா காந்தி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
கூட்டணி இல்லை
இதனிடையே உ.பி. புலந்த்சாகரில் இன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் தேர்தலுக்கு முன்பாக கூட்டணி வைக்கப் போவது இல்லை என்றார். மேலும் 403 சட்டசபை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.
நேருவின் முழக்கம்
முன்னதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், உ.பி.யில் சிறிய கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறது என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பிரியங்கா காந்தி இதனை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். மேலும் இன்றைய கூட்டத்தில் பேசிய பிரியங்கா, பாரத் மாதா கீ ஜே என்பது நேருவின் முழக்கம். விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்களைப் போற்றுவோம் என்பதுதான் பாரத் மாதா கி ஜே என்பதற்கு அர்த்தம்.
களத்தில் காங்கிரஸ்
நாட்டின் விடுதலைக்காக போராடாதவர்கள் சுதந்திரத்தை மதிக்க தெரியாதவர்கள். உ.பி.யில் கொரோனா பாதிப்பு என்றாலும் விவசாயிகள் பாதிப்பு என்றாலும் காங்கிரஸ்தான் மக்களுக்காக போராடி வருகிறது. உன்னாவ், லக்கிம்பூர், ஹத்ராஸில் மக்களுக்காக களத்தில் நின்றது காங்கிரஸ் மட்டும்தான்.. சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் எங்கே போனார்கள்? என்றும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.