நொய்டா அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பை காண குவிந்த மக்கள்... உறவினர்களுக்கு பறக்கும் வீடியோ கால்கள்
லக்னோ: இன்று பிற்பகல் 2.30 மணியளவில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள அபெக்ஸ் மற்றும் செயேன் எனும் இரண்டு பெரிய கட்டிடங்கள் இடிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த கட்டிடத்தின் முன்னர் நின்று பலர் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். இந்த கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகள் ஏறத்தாழ ஒரு செல்ஃபி பாயின்ட் போல உள்ளது.
யூடியூப் சேனல்கள் பல இந்த கட்டிட இடிப்புகளை படம்பிடிக்க கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்துள்ளன.
சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒவ்வொன்றும் 40 தளங்களை கொண்டுள்ளது. ஆனால் இது பசுமையான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதை கட்டியதில் விதி மீறல்கள் அதிக அளவில் நடந்துள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் குடியிருப்பு வாசிகளால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் (2012ல்) வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதமே இந்த கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சில பல பாதுகாப்பு காரணங்களுக்காக ஓராண்டாக இந்த இடிப்பு தள்ளிப்போயுள்ளது.
வெளிநாடுகளில் இதுபோன்று பெரிய கட்டிட இடிப்புகள் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடந்தேறியுள்ளன. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற கட்டிட இடிப்புகள் பெரிய அளவில் நடந்திருக்கவில்லை. எனவே பாதுகாப்பு அம்சங்களை கவனமாக கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால் இந்த தாமதங்கள் தவிர்க்க இயலாததாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 7.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள், இன்று (ஆகஸ்ட் 28ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இடிப்புக்கு சுமார் 3,700 கிலோ வெடிமருந்துகள் தேவைப்படும். இதன் மூலம், ரிக்டர் அளவில் 4 வரை அதிர்வுகள் உண்டாகும். இவ்வாறு உண்டாகும் அதிர்வுகள் 30 மீட்டர்கள் வரை உணர முடியும். ஆனால் நல்வாய்ப்பாக, நொய்டா நகரம் ரிக்டர் அளவு 6 வரை நில அதிர்வுகளை தாங்கும் என்பதால் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த இடிப்பு காரணமாக அக்கம் பக்கத்தில் உள்ள சுமார் 7,000 பேர் காலை 7 மணிக்கே இந்த பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் பலர் செல்ஃபி எடுத்து வருகின்றனர். பிற்பகல் 2.30 மணிக்கு மேல் இந்த கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்படும் நிலையில் அதன் நினைவு சின்னமாக பலர் செல்ஃபி எடுத்து வருகின்றனர். அதேபோல பல யூடியூப் சேனல்களும் இதனை நேரலையில் ஒளிபரப்ப கட்டிடத்தின் சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்துள்ளன. இது குறித்து யூடியூபர் ஒருவர் கூறுகையில், "இந்த கட்டிட இடிப்பு குறித்த செய்திகள் தொடர்ந்து டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. எனவே இதனை இடிப்பதற்கு முன்னர் ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என இங்கு வந்திருக்கிறேன். இதனை படமெடுத்து எனது யூடியூப் சேனலிலும் பதிவேற்றுவேன்" என்று கூறியுள்ளார்.
அதேபோல இந்த கட்டிடத்தின் அருகேயுள்ள எகஸ்பிரசஸ் சாலையில் நின்றுகொண்டு பலர் தங்கள் உறவினர்களுக்கு வீடியோகால் செய்து வருகின்றனர். பலர் குடும்பத்துடன் இந்த சாலைகளில் வேடிக்கை பார்க்க நின்றுகொண்டிருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருக்கிறார்கள். இந்த கட்டிட இடிப்புக்கு பின்னர் தேங்கும் 35,000 கன மீட்டர் இடிபாடுகள் சுற்றுப்புற சுகாதாரத்திற்கு சவாலாக இருக்கும் என பலர் கூறி வருகின்றனர். என்ன மக்களே நீங்களும் நேரலையை பார்க்க தயாரா?