பொய்.. பொய்.. சிறு தலைவர்கள் முதல் டாப் தலைவர்கள் வரை.. பாஜகவை கடுமையாக விமர்சித்த அகிலேஷ்!
லக்னோ: ‛‛பொய் பேசுபவர்கள் நிறைந்திருக்கும் கட்சி பாஜக. இந்த கட்சியின் சிறு தலைவர்கள் சின்ன சின்ன பொய்களையும், பெரிய தலைவர்கள் பெரிய பொய்களையும், ‛டாப்' தலைவர்கள் மிகப்பெரும் பொய்களையும் சொல்கிறார்கள்'' என உத்தர பிரதேச தேர்தல் பிரசாரத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ளார். மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்.,10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் பாஜக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன.

முதல் கட்ட தேர்தல்
பிப்.,10ல் 58 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின. 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. சஹாரான்பூர், மொரொதாபாத், பைரேலி, ராம்பூர், பிஜ்னோர், அம்ரோஹா, சம்பல், புதான், ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளில் நாளை தேர்தல் நடக்கவிருக்கிறது. மொத்தம் 2,01,42,441 பேர் ஓட்டளிக்க தகுதியானவர்களாக உள்ளனர்.

பொய் பேசும் பாஜக
இந்நிலையில் புடான் பகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பாஜகவை தாக்கி பேசினார். அவர் பேசியதாவது: 58 தொகுதிகளுக்கு பிப்.,10ல் முதற்கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. பொதுமக்கள் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் ஓட்டளித்துள்ளனர். இதனால் தேர்தல் முடிவுக்காக மார்ச் 10 வரை காத்திருக்க தேவையில்லை.

முடிவு தேவையில்லை
2ம் கட்ட தேர்தல் நடக்கும் புடான், சம்பல், மொரொதாபாத் மாவட்டங்களில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. பொய்கள் பேசுபவர்கள் பாஜகவில் உள்ளனர். பாஜக பொய்களின் பொதிமூட்டையாக உள்ளது. பாஜகவின் சிறிய தலைவர்கள் சிறிய பொய்களையும், பெரிய தலைவர்கள பெரிய பொய்களையும், பிரதமர் நரேந்தி மோடி உள்ளிட்டவர்கள் மிகப்பெரிய பொய்களையும் கூறி வருகின்றனர்'' என பாஜகவை விமர்சித்தார்.

பாஜகவை வீழ்த்த...
மேலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி குறித்து பேசுகையில், ‛‛பாஜகவை வீழ்த்த சமாஜ்வாதி கட்சி பணியாற்றி வருகிறது. ஆனால் இன்னொரு கட்சி(பகுஜன்சமாஜ்) அப்படியில்லை. இதனால் சமூக செயற்பாட்டாளர்கள், அம்பேகத்கர் கொள்கைகளை பின்பற்றுவோர் சமாஜ்வாதி கட்சியுடன் சேர்ந்து செயல்பட்டு இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும்'' என கூறினார்.












Click it and Unblock the Notifications