''உபியில் பின்பற்றப்படும் சட்டம்-ஒழுங்கு உலகிற்கே உதாரணமாக உள்ளது''- யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பின்பற்றப்படுகின்ற சட்டம் ஒழுங்கு நிலைமை நாட்டிற்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டாக உள்ளது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் காவல் துறை நவீனமயமாக்கம் திட்டத்தின் கீழ் 56 மாவட்டங்களுக்கு நவீன சிறை வேன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி தலைநகர் லக்னோவில் நடந்தது.
இந்த நிகழ்சியில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 56 மாவட்டங்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட சிறப்பு சிறை வேன்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு இடமே கிடையாது.. யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்
குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன
இதைத்தொடர்ந்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:- உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு எல்லாம் எங்கு பார்த்தாலும் கலவரமும், ரவுடிகளின் அராஜகமுமாகதான் இருந்தது. ரவுடிகளின் அட்டகாசம் மாநிலத்தில் அதிகரித்து இருந்தது. ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில்
தற்போது உத்தர பிரதேசத்தில் பின்பற்றப்படும் சட்டம் ஒழுங்கு நாட்டிற்கும், உலகிற்கும் எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. முன்பு போல் இப்போது இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய அரசு ஆட்சியின் போது குற்றவாளிகளை தப்ப விடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அப்படி இல்லை. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான இங்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்காக காவல்துறை நவீனமயமாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கைதிகள் தப்ப முடியாது
அதன் ஒருபகுதியாக தான் தற்போது போலீசாருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் கொண்ட நவீன சிறை வேன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட வேனில் கைதிகளை நீதிமன்றத்திற்கு போலீசார் பாதுகாப்பாக அழைத்து செல்ல முடியும். முன்பு உள்ள பழைய வேன்களில் கைதிகள் அழைத்து செல்லப்படும்போது அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடும் நிலை இருந்தது.
போலீசாருக்கு பாதுகாப்பு
ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேன்களில் இத்தகைய நிலை ஏற்படாத வகையில் பல தொழில்நுட்ப வசதிகள் இந்த வேன்களில் உள்ளது. இதனால் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு செல்லும் போதும், நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு செல்லும் போதும் போலீசாரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதேபோல் கைதிகள் தப்பி ஓடும் சம்பவங்கள் குறையும். இதேபோல் மாநிலத்தில் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.