கவனித்தீர்களா.. கடந்த தேர்தலில் செய்த தவறுகளை முழுசா திருத்திய அகிலேஷ் யாதவ்! பாஜகவிற்கு பக்கா செக்!
லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தல் அறிவிக்கப்பட்டு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 2017 தேர்தலில் செய்த தவறுகளில் பாடம் கற்றுவந்த அகிலேஷ் யாதவ் இந்த முறை வெற்றி பெற தீவிரமாக உழைத்து வருகிறார்.
Recommended Video
உத்தரபிரதேச சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 15-ம் தேதி முடிவடையும் நிலையில் அதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கவிருக்கிறது. ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர நினைக்கிறது. கடந்த முறை ஆட்சியை இழந்த சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றே தீரவேண்டும் எனதீர்மானித்துள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தலில் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பெருமுயற்சி செய்து வருகிறார். 2017 தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட அகிலேஷ், அதை இந்தத் தேர்தலில் எந்த இடத்திலும் செய்யாமல் அனைத்து தவறுகளையும் திருத்திக்கொண்டு வருகிறார். அகிலேஷ் யாதவ் ஒரு புத்திசாலியான அரசியல்வாதி, எனவே, இந்த தேர்தலில் வெற்றிபெறத் தேவையான அனைத்து யுத்திகளையும் செய்துவருகிறார்.
'வாழ்க்கையில் ஏதாவது சாதிச்சியானு கேட்டா கண்டிப்பாக இதை சொல்வேன்'.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
அகிலேஷ் யாதவ்
கடந்த தேர்தலில் அகிலேஷ் யாதவ் தோல்வியடைந்ததற்கு சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம் சார்பு இமேஜ் ஒரு முக்கிய காரணம் என்று அகிலேஷ் நினைத்தார். அதேபோல் பாஜகவும் சமாஜ்வாதி கட்சியை முஸ்லிம்களுக்கு ஆதரவான கட்சியாக இருப்பதாக தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தது. சமாஜ்வாடி கட்சிக்கு இருக்கும் முஸ்லிம் இமேஜ் பெயரை மாற்ற நினைத்தார் அகிலேஷ் யாதவ். இதையடுத்து முஸ்லிம் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுவதை தவிர்த்தார். தனது கட்சியில் முஸ்லிம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் குறைத்துக்கொண்டார்.
முஸ்லிம் இமேஜ்
சமாஜ்வாதி கட்சிக்கு முஸ்லிம் இமேஜ் இருப்பதை நிரூபிக்க பாஜக பல முயற்சிகள் செய்தது, அதிலிருந்து அகிலேஷ் யாதவ் தப்பித்துக் கொண்டே வந்தார். முஸ்லிம்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து அகிலேஷிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பினார் அசாதுதீன் ஓவைசி. அப்போதும் அகிலேஷ் மெளனம் காத்தார். அதேநேரம், வேட்பாளர்கள் நிறுத்துவதிலும் கவனம் செலுத்தினார் அகிலேஷ். முஸ்லிம் வேட்பாளர்களை குறைக்கத் தொடங்கியது சமாஜ்வாதி கட்சி. முஸ்லிம் ஓட்டுகள் அதிகம் இருக்கும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் தொகுதியை ராஷ்டிரிய லோக் தளத்துக்கு ஒதுக்கியது. முஸாபர்நகர் மற்றும் காஸிதாப் பகுதிகளில் ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்க அகிலேஷ் விரும்பவில்லை.
யாதவ் கட்சி
சமாஜ்வாடி கட்சியில் யாதவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக அகிலேஷ் யாதவை நேரடியாக குற்றம் சாட்டினர். இதை முன்னிறுத்தியே 2017 தேர்தலை எதிர்கொண்டது பாஜக. யாதவர்கள் இல்லாத ஒ.பி.சி தலைவர்களுக்கு வாய்ப்பளித்தது பாஜக. இந்நிலையில், இந்த முத்திரையையும் நீக்க அகிலேஷ் யாதவ் முயற்சி செய்து வருகிறார். சமாஜ்வாடியில் இருக்கும் யாதவ தலைவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கும் அகிலேஷ், மற்ற ஓ.பி.சி தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
குடும்ப கட்சி
யாதவர்கள் இல்லாத தலைவர்கள் சமாஜ்வாதியில் இல்லாததே, கடந்த முறை ஆட்சிக்கு வரமுடியாமல் போனதற்கு காரணம் என அகிலேஷ் நினைக்கிறார். இதையடுத்து, ஒ.பி.சி கட்சிகளை தனது கட்சியுடன் கூட்டணி வைக்க அகிலேஷ் முயற்சி செய்து வருகிறார். சமாஜ்வாடி கட்சியை குடும்ப கட்சி என்று தொடர்ந்து விமர்சனம் செய்கின்றன எதிர்கட்சிகள். அதை மாற்ற வேண்டும் என அகிலேஷ் யாதவ் முயற்சிக்கிறார். முலாயம் குடும்பத்தினர் யாரும் தேர்தல் பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பில் அகிலேஷ் யாதவுடன் தென்படவில்லை. அகிலேஷின் மாமா பேராசிரியர் ராம் கோபால் யாதவ், ஷிவ்பால் யாதவ் மற்றும் பாய் தர்மேந்திர யாதவ் ஆகியோர் அனைத்து கட்சி மேடைகளில் இடம்பெறுவார்கள்.இந்தமுறை இவர்கள் யாரும் எந்த இடத்திலும் தென்படவில்லை. மேலும், இம்முறை குடும்ப உறுப்பினர் யாருக்கும் தேர்தலில் போட்டியிட அனுமதி இல்லை என்பதை அகிலேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.
அபர்ணா யாதவ்
சிவபால் யாதவின் கட்சியை சமாஜ்வாடி கட்சியுடன் இணைப்பதற்குப் பதிலாக, அவரது மகன் ஆதித்யா யாதவுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறார். மேலும், அகிலேஷின் சகோதரர் பிரதீப் யாதவின் மனைவி அபர்ணா யாதவ் சமாஜ்வாதி கட்சியில் இருந்து பாஜகவுக்கு சேர்ந்துள்ளார். இதற்கு காரணம், அபர்ணா தேர்தலில் போட்டியிட சீட் கேட்டிருக்கிறார். அகிலேஷ் மறுத்துவிட்டார். இதனால், அபர்ணா யாதவ் சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்துள்ளார். இதை தனக்கு சாதகமாகவே பார்க்கிறார் அகிலேஷ் யாதவ் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அம்பேத்கர்
ராம் மனோகர் லோஹியாவுடன், அம்பேத்கர் கொள்கையையும் அகிலேஷ் சமீபகாலமாக பின்பற்றி வருகிறார். இதற்கு சாட்சியாக கட்சி போஸ்டர்களில் அம்பேத்கர் படம் தொடர்ந்து இடம் பெற்றுவருகிறது. அகிலேஷ் யாதவ், தான் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும் சமூக நீதி பேசும் தலைவர்களைப் பின்பற்றி வருகிறார். தலித், பிற்படுத்தப்பட்டோர் பிரச்னைகளையும் முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறார். இதற்குமுன் இதுபோன்று அகிலேஷ் பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், யோகி அரசு குறிப்பிட்ட சாதியினரால் ஆதிக்கம் செலுத்துப்படுகிறது என்று எல்லா இடங்களிலும் பகிரங்கமாகச் சொல்லி வருகிறார்.
மாற்றி யோசி
சாமானிய மக்களை சென்றடையும் விதமாக தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்துவருகிறார். 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது, இதற்காக கட்சித் தலைவர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை நிரப்பி வருகின்றனர். சமாஜ்வாடி ஓய்வூதியம் ஆண்டுக்கு 6000 ரூபாயில் இருந்து 18000 ரூபாயாக உயர்த்தப்படும் என அகிலேஷ் அறிவித்திருக்கிறார். 10 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். மேல்தட்டு மனநிலையில் இதுவரை அரசியல் செய்தும் பேசியும் வந்த அகிலேஷ் யாதவ் தற்போது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சாமானிய மக்களின் நாடித்துடிப்பில் கை வைத்துள்ளார். இது அவருக்கு பலன் தருமா என்பதை தேர்தல் முடிவுகளே உணர்த்தும்.