'ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை.. ' ராமர் கோயில் கட்டுமானத்தைப் பார்வையிட்ட குடியரசு தலைவர் பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தைப் பார்வையிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நான்கு நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் சென்றுள்ளார்.
கடந்த 3 நாட்களாக அங்குள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொண்ட அவர், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் டாக்டர் சம்பூர்ணானந்தின் சிலையையும் திறந்து வைத்தார்.

அயோத்தியில் குடியரசுத் தலைவர்
அதைத் தொடர்ந்து இன்று அயோத்திக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றார். அங்குக் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள குழந்தை வடிவில் இருக்கும் ராமர் சிலை முன் சிறப்பு வழிபாடும் நடத்தினார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராமாயண கருத்தரங்கையும் அவர் தொடக்கி வைத்தார்.

ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை
அப்போது பேசிய அவர், "ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை. ராமர் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் அயோத்தி உள்ளது. உண்மையைச் செல்ல வேண்டும் என்றார் ராமர் இந்த நகரத்தில் நிரந்தரமாக வசிக்கிறார். அதாவது உண்மையான அயோத்தி இந்த இடத்தில் தான் உள்ளது. அதேபோல நம் அனைவரிடமும் ராமரும் சீதையும் உள்ளனர். அதைக் காண நாம் முயல வேண்டும்.

அயோத்தி பெயர்க் காரணம்
அயோத்தி என்ற சொல்லுக்குப் போரில் தோற்கடிக்க முடியாதவன் என்று அர்த்தம். ராமர் மற்றும் அவருடன் பிறந்த சகோதரர்களின் வலிமை காரணமாக அவர்களது தலைநகர் வெல்ல முடியாத ஒன்றாகக் கருதப்பட்டது. எனவே, இந்த நகரம் அயோத்தி என்ற பொருத்தமான பெயரைப் பெற்றது. ராமாயணம் நம் நாட்டில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் புகழ்பெற்ற ஒன்றாக உள்ளது.

காந்தியின் ராமராஜ்யம்
இந்தோனேசியா, மாலத்தீவு, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ராமாயணம் புகழ்பெற்ற ஒன்றாக உள்ளது. மகாத்மா காந்தி ராமரின் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கி இருந்தார். காந்தியடிகள் தனது லட்சிய இந்தியாவை ராமராஜ்ஜியம் என்றே குறிப்பிட்டார். மகாத்மா காந்தியில் வாழ்வில் ராமர் முக்கியமான ஒன்றாகவே இருந்தது. ராம ராஜ்ஜியத்தில் பாகுபாடும் கிடையாது, தண்டனைச் சட்டமும் கிடையாது" என்றார்.












Click it and Unblock the Notifications