உ.பி. தேர்தல்: காங்கிரஸ் சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காணொலி காட்சி மூலம் இன்று வெளியிட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் பாஜகவும் காங்கிரஸும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றன. அது போல் சமாஜ்வாதி கட்சியும் கடுமையாக போராடி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போட்டியிடுவதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிரியங்கா காந்தி வெளியிட்டார்.
இந்த வேட்பாளர் பட்டியலில் 125 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 40 சதவீதம் பெண்களும் 40 சதவீதம் இளைஞர்களும் இடம்பெற்றுள்ளனர். உன்னவ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தாய் ஆஷா சிங் உன்னவ் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அது போல் சோனா பத்ராவில் உம்பா கிராமத்தில் கோண்ட் பழங்குடியினருக்காக போராடி வரும் ராம்ராஜ் கோண்டுவுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அது போல் குடியுரிமை திருத்த மசோதாவை (சிஏஏ) எதிர்த்து போராட்டம் நடத்தி சிறைக்கு சென்ற காங்கிரஸ் நிர்வாகி சதாஃப் ஜாஃபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஷாஜஹான்பூரில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க முயற்சித்த போது காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட பூணம் பாண்டேவுக்கும் தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி வாய்ப்பளித்துள்ளார். பூணம் பாண்டே ஆஷா பணியாளர் (சமூக சுகாதார ஆர்வலர்) ஆவார். பிரியங்கா வெளியிட்ட 125 பேரில் ஆஷா சிங், ராம்ராஜ் கோண்ட், சதாஃப ஜாஃபர், பூணம் பாண்டே ஆகிய 4 பேர் முக்கியமானவர்களாக அறியப்படுகிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் 40 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவித்து இருந்தார் பிரியங்கா. தற்போது அவர், தான் சொன்னதை நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.