தலிபான்களை சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேச்சு.. உ.பி. எம்.பி மீது தேசத்துரோக வழக்குபதிவு
லக்னோ: இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் தாலிபான்களை ஒப்பிட்டு பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. இப்போது உலகமெங்கும் ஆப்கானிஸ்தான் பற்றியே பேச்சாகவே இருக்கிறது.
அங்கு சுமார் 20 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கான் சர்ச்சையை முறியடித்து தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட்டனர்.
ஏற்கனவே பாகிஸ்தான் தாலிபான்களுக்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவித்து விட்டது. இது தவிர சீனாவும், ரஷ்யாவும் தாலிபான்கள் நடவடிக்கையை பாராட்டியுள்ளன.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம்
இந்தியாவை பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் தாலிபான்கள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்தவொரு அரசியல் தலைவர்களும் தாலிபான்கள் இயக்கத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன், தாலிபான்களை ஒப்பிட்டு பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி. மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளது.

சர்ச்சை கருத்து
உ.பி.,யின் சாம்பல் தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.பி.,யான சபிக்குர் ரஹ்மான் பார்க் பேசுகையில், ' ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்தபோது, 'முழு நாடும் சுதந்திரத்திற்காக போராடியது'. தற்போது தலிபான்கள் அவர்கள் நாட்டை சுதந்திரம் பெற வைத்திருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் அவர்களே ஆள வேண்டும் என கருதுகின்றனர். அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். இது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இதில் நாம் எப்படி தலையிட முடியும்? இதில் என்ன தவறு இருக்கிறது? என்று சபிக்குர் ரஹ்மான் பார்க் பேசினார்.

தேசத்துரோக வழக்கு
இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சபிக்குர் ரஹ்மான் மற்றும் இருவர் மீது உத்தர பிரதேச போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சம்பால் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சர்கேஷ் மிஸ்ரா கூறுகையில், ' தலிபான்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்காக சபிக்குர் ரஹ்மான் பார்க் மற்றும் மற்ற இருவர் மீது நேற்றிரவு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்திய அரசின் கூற்றுப்படி தலிபான் ஒரு பயங்கரவாத அமைப்பாகும்' என்று கூறினார்.

நான் தவறாக பேசவில்லை
இந்த நிலையில் தான் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களையும், தாலிபான்களையும் ஆதரித்து பேசவில்லை என்றும் தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாகவும் சபிக்குர் ரஹ்மான் எம்.பி கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ' தாலிபான்களை இந்திய சுதந்திர போராளிகளுடன் ஒப்பிட்டு நான் அப்படி எதுவும் கூறவில்லை. எனது அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் இந்தியாவின் குடிமகன், ஆப்கானிஸ்தான் குடிமகன் அல்ல. அங்கு என்ன நடக்கிறது என்ற விவரம் எனக்கு தேவையில்லை. எனது அரசாங்கத்தின்(இந்தியா) கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications