உ.பியில் தொடரும் அவலம்.. லக்கிம்பூர் கேரியில் மரத்தில் தொங்கிய தலித் சகோதரிகளின் உடல்கள்.. கொடுமை
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டியலினத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகளின் உடல்கள் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக சகோதரிகளின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து வழக்கும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையின் கீழ் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனங்களை அதிகப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உடல்கள் மீட்பு
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நேற்று இரவு இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதும் பின்னர்தான் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளின் பெற்றோர், சகோதரிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்து கொலை
சம்பவம் குறித்து பேட்டியளித்த சிறுமியின் பெற்றோர், தனது மகள்கள் வலுக்கட்டாயமாக பைக்கில் அழைத்து செல்லப்பட்டதாகவும், அதை தடுக்க முயன்றபோது கடத்தியவர்கள் தங்களை தாக்கியதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கிட்டவாறு தொங்கியுள்ளதை பெற்றோர் பார்த்துள்ளனர். கடத்தி சென்றவர்கள் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களை கொலை செய்துள்ளதாக தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறையினருக்கு எதிராக போராட்டம்
இதன் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. குற்றவாளிகள் மீது கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட தண்டனைச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. உடல்கள் குடும்பத்தாரின் வசம் இருப்பதால் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப காவல்துறையினர் முயன்றபோது கிராமத்தினர் காவல்துறையினை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

பிரேத பரிசோதனை
இறுதியாக உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து லக்னோ சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் லட்சுமி சிங் கூறுகையில், சிறுமிகளின் துப்பட்டாக்களில் உடல்கள் மரத்தில் தொங்கிகொண்டு இருந்துள்ளது. அதேபோல் உடல்களில் வெளியில் எவ்வித வெளிக்காயங்களும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே எது உண்மை என்று தெரிய வரும் என்றும் லட்சுமி சிங் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
உள்ளூர் மக்களின் போராட்டங்கள் ஒருபுறம் இருக்க இந்த சம்பவம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள், யோகி ஆதித்யநாத் தலைமையிலான சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. "யோகி அரசாங்கத்தின் கீழ் குண்டர்கள் தினம் தினம் தாய்மார்களையும், சகோதரிகளையும் துன்புறுத்தி வருகின்றனர். அரசு இந்த விஷயத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்" என்று சமாஜ்வாதி கட்சி ட்வீட் செய்துள்ளது.

மாயாவதி
அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், போராட்டங்களின் படங்களை ட்வீட் செய்துள்ளார். சிறுமிகளின் தந்தை இது குறித்து கூறுகையில், அனுமதியின்றியும், நடைமுறையை மீறியும் பிரேத பரிசோதனை நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மற்றொருபுறம் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறுகையில், குற்றவாளிகள் அச்சமில்லாமல் இயங்கி வருகின்றனர்.

காங்கிரஸ்
ஏனெனில் அரசின் முன்னுரிமைகள் தவறாக உள்ளன. தற்போது லக்கிம்பூர் கேரியில் நடந்துள்ள சம்பவம் மாநில அரசு சட்டம் ஒழுங்கை எந்த அளவுக்கு கட்டுப்படுத்தியுள்ளது என்பதை காட்டுகிறது என்று கூறியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "லக்கிம்பூரில் சகோதரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மனதை உலுக்குகிறது. பட்டப்பகலில் சிறுமிகள் கடத்தப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரியங்கா காந்தி
நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பொய்யான விளம்பரங்கள் கொடுப்பதால் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த முடியாது. உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். பட்டியலினத்தை சேர்ந்த சிறுமிகள் இருவரின் உடல்கள் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications