'அகோரி'களிடையே அதிகார மோதல்... உ.பி.யில் தலைமை சாது மர்ம மரணம்- ஹரித்வாரில் யோகா சாமியார் கைது!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அகாடாக்கள் எனப்படும் அகோரிகள் அமைப்பின் தலைமை சாது மகந்த் நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக நரேந்திர கிரி எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் யோகா சாமியார் ஆனந்த் கிரி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட இந்தியாவில் இந்து சாதுக்களின் அமைப்புதான் அகாடாக்கள். நிர்வாண சாதுக்களுக்கும் தனி அகாடாக்கள் உண்டு.
இந்த சாதுக்கள்தான் கும்பமேளா காலங்களில் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடி நிர்வாண ஊர்வலம் நடத்தி புனித நீராடுவர். நிர்வாண சாதுக்களிடம் ஆசீர்வாதம் பெறுவதை வட இந்தியர்கள் பெரும் புனிதமாக கருதுவர்.
புகைப்படக் கலைஞர் டூ காவி உடை சுவாமி - விளாத்திகுளத்தை கலக்கிய போலி சாமியார் கைது
புனித அமைப்பு அகாடாக்கள்
உ.பி, ம.பி., குஜராத், உத்தரகாண்ட் மாநிலங்களில்தான் அகாடாக்கள் உள்ளன. உத்தரகாண்ட் ஹரித்வாரில் திரும்பிய பக்கம் எல்லாம் அகாடாக்கள்தான் இருக்கும். சாதுக்கள்தான் இங்கு தங்குவர். இந்த சாதுக்கள் தங்குவதற்கு ஏசி அறைகளும் உண்டு. அகாடாக்களுக்கான நிதி, அகாடாக்களின் செயல்பாடுகள், அகாடாக்களின் உறுப்பினர் விவகாரங்கள் எதுவும் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை. பொதுவாக கேள்விக்குள்ளாக்கப்படாத ஒரு புனித அமைப்பாகவே அகாடாக்கள் உள்ளன.
பரபரப்பை கிளப்பிய நித்தி
தென்னிந்தியாவை சேர்ந்தவர்களும் இந்த அகாடாக்களில் இருக்கின்றனர். ஆனால் தென்னிந்திய இந்து மடங்கள், மடாதிபதிகள் இத்தகைய அகாடாக்களுடன் தொடர்பு வைப்பது இல்லை. தென்னிந்தியாவில் அகாடாக்களும் இல்லை. சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியானந்தா ஒருமுறை அகாடாக்களின் மகா மண்டலேஸ்வராக பிரகனப்படுத்தி பரபரப்பை கிளப்பி இருந்தார்.
நரேந்திர கிரி தற்கொலை
இத்தகைய சாதுக்களின் அகாடாக்களுக்கு தலைமை அமைப்பாக செயல்படுவது அகில பாரதிய அகாடா பரிஷத்-Akhil Bharatiya Akhada Parishad. உ.பி.யின் பிரக்யராஜில் இதற்கான மடம் உள்ளது. இதன் தலைவராக இருந்த நரேந்திர கிரி நேற்று தற்கொலை செய்து கொண்டார். நரேந்திர கிரியின் மரணம் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள், அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
மோடி, அமித்ஷா இரங்கல்
நரேந்திர கிரியின் மரணத்துக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஏராளமான சாதுக்கள் நரேந்திர கிரியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்துகின்றனர்.
ஹரித்வார் சாமியார் கைது
இதனிடையே நரேந்திர கிரி தாம் தற்கொலை செய்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதேபோல் வீடியோ ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார். இவற்றின் அடிப்படையில் நரேந்திர கிரியை தற்கொலைக்கு தூண்டியதாக ஹரித்வார் யோகா சாமியார் ஆனந்த் கிரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நரேந்திர கிரியின் மரணத்துக்கு காரணமானவர்களை சும்மாவிடமாட்டோம் என்றும் யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நரேந்திர கிரி கொல்லப்பட்டாரா?
இந்த நிலையில் ஊடகங்களிடம் பேசிய ஹரித்வார் சாமியார் ஆனந்த் கிரி, நரேந்திர கிரி நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருக்கமாட்டார். அவரது மரணத்துடன் பல கோடி ரூபாய் பணத்துக்கும் தொடர்புள்ளது. நரேந்திர கிரியின் மடத்தைச் சேர்ந்த பலருக்கும் இதில் தொடர்பு உண்டு என திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் நரேந்திர கிரியின் மரணத்தில் ஏராளமான மர்மங்கள் இருப்பதாகவே கூறப்படுகிறது.