உ.பி தேர்தல்: 403 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி...மாயாவதி போட்டியிடாதது ஏன்
உத்தரபிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் மாயாவதி போட்டியிட மாட்டார் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சி மிஸ்ரா அறிவித்துள்ளார்.
லக்னௌ: உத்தரபிரதேச மாநில தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயவதி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சி மிஸ்ராவும் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபைத் தேர்தல் குறித்த தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து கடைசிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் மார்ச் 10இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தல் பணிகளை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஜனவரி 15ஆம் தேதி வரை நேரடி பிரசாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் விசித்திரம்.. யோகி ஆதித்யநாத், அகிலேஷ், மாயாவதி, பிரியங்கா தேர்தலில் போட்டி இல்லை?
பலமுனை போட்டி
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளது. அதேநேரம் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்தநிலையில் சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.பி மிஸ்ரா கூறியுள்ளார். எஸ்.சி மிஸ்ராவும் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
மாயாவதி சூளுரை
சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி அரசு இயந்திரம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருந்தால் இந்த தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்று கூறியிருந்தார். உத்தரப் பிரதேச மக்கள் வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் எங்கள் கட்சி முறையாகப் பின்பற்றி பிரசாரம் செய்யும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முடிவை மாற்றிய மாயாவதி
கடந்த 2007 ஆம் ஆண்டு வெற்றி பெற்றதை போல மாபெரும் வெற்றியைப் பெற முக்கிய தலைவர்களுடன் மாயாவதி ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது. மாநிலத்தில் உள்ள பிராமணர்களின் வாக்குகளைப் பெற நெருங்கிய அரசியல் உதவியாளரான சதீஷ் சந்திர மிஸ்ரா எம்பி உடன் சேர்ந்து மாயாவதி முக்கிய திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாயவதி தேர்தல் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியை தக்கவைக்கும்
சில தினங்களுக்கு முன்பு வெளியான டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக 227 முதல் 254 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சமாஜ்வாடி கட்சி 136 முதல் 151 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 6 முதல் 11 இடங்களை மட்டுமே வெல்லும் எனவும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கணிப்பால் கவலை
பகுஜன் சமாஜ் கட்சி 8 முதல் 14 இடங்களை வெல்லும் எனவும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தங்களின் கட்சிக்கு சொற்ப இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியானதை அடுத்து கட்சித்தலைவர் மாயாவதியும், பொதுச்செயலாளர் எஸ்.சி மிஸ்ராவும் போட்டியிடாமல் விலகியுள்ளனர்.