உ.பி.: பா.ஜ.க.வுக்கு எதிராக முதல்வர் யோகி ஆதித்யநாத் கோட்டையில் சூறாவளி பிரசாரத்தில் விவசாயிகள்!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க) வாக்களிக்க கூடாது என முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையான கோரக்பூரில் டெல்லியில் போராடும் விவசாயிகள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. உ.பி.யில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மத்திய அமைச்சர்கள் படையை களமிறக்கியுள்ளது பா.ஜ.க.
உ.பி. மாநிலத்தை மண்டலங்களாக பிரித்து தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அதிருப்திகளை சமாளிக்கும் வியூகங்களை மத்திய அமைச்சர்கள் செயல்படுத்தியும் வருகின்றனர்.
பல்லாயிரம் பேர்.. விஸ்வரூபம் எடுக்கும் கர்னல் போராட்டம்.. பஞ்சாப், உ.பியிலிருந்து குவிந்த விவசாயிகள்
டெல்லி விவசாயிகள் போராட்டம்
உ.பி.யுடன் உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் குஜராத் சட்டசபைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தேர்தலில் டெல்லியில் 10 மாதங்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். டெல்லியில் பஞ்சாப், உ.பி, ஹரியானா மாநில விவசாயிகள்தான் கடந்த 10 மாதங்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர்.
உ.பி.யில் டேரா போட்ட விவசாயிகள்
இதனிடையே முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக கருதப்படும் கோரக்பூர் பகுதியில் டெல்லியில் போராடும் விவசாயிகள் முகாமிட்டு பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோரக்பூரின் சஜனவா என்ற பகுதியில் விவசாயிகள் பஞ்சாயத்து எனப்படும் மக்கள் ஒன்றுகூடலை செவ்வாய்க்கிழமையன்று நடத்தினர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள்
இந்த பஞ்சாயத்து கூட்டத்தில் அகில பாரதீய கிசான் சபாவின் பொதுச்செயலாளர் அதுல் அஞ்சன் பேசியதாவது: 3 புதிய விவசாய சட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் விவசாய தொழிலையும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு திறந்துவிட்டிருக்கிறது பா.ஜ.க. விவசாய தொழிலில் 82% சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள்தான். இந்த விவசாய சட்டங்கள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் சிறு, நடுத்தர விவசாயிகள் காணாமலே போகும் நிலையை உருவாக்கி இருக்கிறது மத்திய பா.ஜ.க.அரசின் வேளாண் சட்டங்கள்.
பாஜகவுக்கு வாக்களிக்காதீர்
விவசாய சட்டங்கள் மூலம் விளைநிலங்கள் இனி கார்ப்பரேட் கைகளுக்குப் போய்விடும். விவசாயிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக வேலை செய்ய நேரிடும். நாட்டின் 70% இளைஞர்கள் விவசாயத்தை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இனி இவர்களது எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். மத்திய அரசின் விவசாய சட்டங்கள் ஒட்டுமொத்தமாக இந்த தேசத்தை நாசமாக்கப் போகிறது. ஆகையால் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களிக்காமல் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அதுல் அஞ்சன் பேசினார்.
செப்.27-ல் பாரத் பந்த்
பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் பிரபால் பிரதாப் பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.கவுக்கு தோல்வி என்றால் என்ன என்பதை தந்தாக வேண்டும். மத்திய அரசின் 3 விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்படாவிட்டால் எங்களது நாடு தழுவிய போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அதேபோல் நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்வோம். விளைநிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலைக்கு உத்திரவாதம் வேண்டும். செப்டம்பர் 27-ல் நடைபேறும் நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்போம். இவ்வாறு பிரபால் பிரதாப் கூறினார்.