'மக்களிடம் ஓட்டுகேட்க போகணும்.. ஜாமீன் கொடுங்க ஜட்ஜ் ஐயா'.. உச்சநீதிமன்றத்தில் சமாஜ்வாடி தலைவர் மனு
லக்னோ: உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம் கான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இவர் 2020-ம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரபிரதேச மாநில தேர்தல்
அங்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இதனால் அங்கு அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற என்று பா.ஜ.க மிக தீவிரமாக இருக்கிறது. எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. காங்கிரசும் உ.பி.யில் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

பிரசாரம் செய்வதற்காக ஜாமீன்
இதனால் பாஜக, சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உ.பி.யில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம் கான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2020-ம் ஆண்டு பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாநில அரசு சதி
தனக்கு எதிராக நிலுவையில் உள்ள மற்ற அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற முடியும் என்று கூறப்பட்டாலும், மூன்று வழக்குகளின் நடவடிக்கைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது தேர்தல் நேரத்தில் அசாம் கான் சிறையில் இருக்க வேண்டும் என்பதற்காக மாநில அரசு மூன்று ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை தாமதப்படுத்த அனைத்து வழிகளையும் மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

பாஜக கிண்டல்
சிறையில் இருக்கும் ஒருவர் ஜாமீனில் வெளி வந்து கட்சிக்கு பிரசாரம் செய்யும் அளவுக்கு சமாஜ்வாடி நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பாஜக கிண்டல் செய்துள்ளது. கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற்காக பாஜக வேண்டுமென்றே அசாம்கானை சிறையில் அடைத்தது என்று சமாஜ்வாடி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications