''கொரோனா நிலை பற்றி பேசினால்.. தேசத்துரோகி பட்டம் சூட்டுவார்கள்''.. சொல்வது உ.பி. பா.ஜ.க எம்.எல்.ஏ!
லக்னோ: கொரோனா நிலை பற்றி பேசினால் என் மீது தேசத்துரோக வழக்கு பாயும் என்று உத்தர பிரதேச பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் ஆட்சி புரியும் உத்தர பிரதேசத்தில் கொரோனாவின் பாதிப்ப கொடூரமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உத்தர பிரதேசத்தில் 10,682 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 311 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

மோசமாகும் உ.பி. நிலை
உத்தர பிரதேசத்தில் தற்போது கொரோனா தொற்று சற்று குறைகிறபோதிலும் அங்கு மோசமான மருத்துவ கட்டமைப்புகள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு அதிகரித்து வருவது போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டது. புண்ணிய நதிகளான யமுனை, கங்கையிலும் சடலங்கள் மிதந்து வரும் அவல நிலை நீடித்து வந்தது.

ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு
உத்தர பிரதேச அரசு கொரோனா நிலைமையை சரியாக கையாளவில்லை என்று அந்த மாநிலத்தின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களே யோகி அரசை கடுமையாக சாடி வந்தனர். ''எனது மனைவி படுக்கைகாக 3 மணி நேரம் காத்திருந்தார். எனக்கே இப்படி என்றால் சாதாரண மக்களின் நிலைமை என்னவாகும்?'' என்று ஒரு ஆளும் கட்சி எம்.எல்.ஏ நேரடியாக குற்றம் சாட்டி இருந்தார்.

தேசத்துரோகி பட்டம் கிடைக்கும்
இந்த நிலையில் 'கொரோனா நிலை பற்றி பேசினால் எனக்கும் தேசத்துரோகி என்ற பட்டம் கிடைக்கும்' என்று உத்தர பிரதேச எம்.எல்.ஏ. பேசி இருப்பது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிகிச்சை மையம் தயராக உள்ளது. பல்வேறு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாதபோது இந்த மையம் ஏன் பயன்பாட்டுக்கு வரவில்லை? என்று நிருபர்கள் பா.ஜ.க எம்.எல்.ஏ. ராகேஷ் ரத்தோரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

பேச முடியாது
இதற்கு பதிலளித்த ராகேஷ் ரத்தோர் ''எம்.எல்.ஏக்கள் தங்கள் மனதில் உள்ளதை பேச முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கடந்த காலங்களில் நான் கேள்விகளை எழுப்பியிருப்பது உங்களுக்குத் தெரியும். மாநிலத்தின் கொரோனா நிலை பற்றி என்னை போன்ற எம்.எல்.ஏ.க்கள் அதிகம் பேசினால் நாங்கள் தேசத்துரோகிகளாகி விடுவோம்.எங்கள் மீது தேசத் துரோக வழக்கு பாயும் என்று ராகேஷ் ரத்தோர் தெரிவித்தார்.

மோடியை விமர்சித்தவர்
கொரோனா முதல் அலையின்போது, மக்களை கை தட்டுங்கள், வீடுகளின் முன்பு விளக்கு ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி கூறியபோது, கை தட்டினால் கொரோனா ஓடி விடுமா? என்று அதனை விமர்சித்து இருந்தார் ராகேஷ் ரத்தோர். உத்தர பிரதேச தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.வில் இணைந்த ராகேஷ் ரத்தோர், கடந்த காலங்களில் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் ஆவார். இவருக்கு மாயாவதியின் பகுஜன் சாம்ஜ் கட்சி உடன் நெருங்கிய தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications