உ.பி. அரசியல் வரலாற்றிலேயே.. தொடர்ந்து 2வது முறையாக முதல்வராகும் முதலாவது முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதன் மூலம் உ.பி. பாஜக இரு வரலாற்று சாதனைகளை பதிவு செய்கிறது.
Recommended Video
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 இடங்களுக்கு சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான இடங்களை தாண்டிவிட்டது. உ.பி.யில் ஆட்சி அமைக்க 202 இடங்கள் தேவைப்படுகிறது. அந்த பெரும்பான்மை பலத்தை பாஜக தாண்டியுள்ளது. பாஜக 222 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 85 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பாஜக எத்தனை இடங்கள்
பகுஜன் சமாஜ் கட்சி 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. மெஜாரிட்டியை தாண்டிவிட்டதால் பாஜகவே உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை அமைக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 312 இடங்களில் வென்றது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 47 இடங்களிலும், மாயாவதி கட்சி 19 இடங்களிலும் வென்றுள்ளது.

சட்டம் ஒழுங்கு
உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும் அவ்வப்போது பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் யோகி அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும் மக்கள் இத்தகைய வெற்றியை வாரி கொடுத்துள்ளார்கள்.

2024 லோக்சபா தேர்தல்
உ.பி. சட்டசபைத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரம் என்பதால் அந்த தேர்தல் உற்று நோக்கப்பட்டது. தற்போது இந்த சட்டசபை தேர்தலில் பாஜக வென்றதன் மூலம் இரு சாதனைகளை படைத்துள்ளது. ஒன்று 1985ம் ஆண்டுக்கு பிறகு உ.பி.யில் ஒரு கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது. வரலாற்று வெற்றியை பதிவு செய்கிறது பாஜக.

வரலாறு திரும்புகிறது
1980 ஆம் ஆண்டும் 1985 ஆம் ஆண்டும் உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரு முறை தொடர்ந்து ஆட்சி அமைத்தது. அதன் பிறகு எந்த கட்சியும் மீண்டும் ஆட்சியை அமைக்கவில்லை. ஜனதா தளம், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என மாறி மாறி ஆட்சி அமைத்தன. இந்த முறை 2017 மற்றும் 2022 தேர்தல்களிலும் பாஜகவே ஆட்சியை தொடர்கிறது.

மீண்டும் முதல்வராக யோகி தேர்வு
அது போல் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்ற நிலையில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார். தற்போது 2022 ஆம் ஆண்டு தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக பாஜக சார்பில் களமிறக்கப்பட்டார். இதுவரை உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்த முதல்வர்களில் எந்த முதல்வரும் மீண்டும் வென்று முதல்வரானதில்லை. ஆனால் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக உள்ளார். இதுவும் ஒரு சாதனை. வேலைவாய்ப்பின்மை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பாஜக உ.பி.யில் இந்த இரு சாதனைகளை புரிந்துள்ளது.












Click it and Unblock the Notifications