1 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் ரிட்டர்ன்... கொரோனாவின் கோரப் பிடியில் உ.பி. ஜவுன்பூர் மாவட்டம்
லக்னோ: பிற மாநிலங்களில் பணிபுரிந்த சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததால் இன்று உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூர் மாவட்டமே கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் மிக மிக உள்மாவட்டம் ஜவுன்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டனர்.
மே 1 பொது விடுமுறை...முழு ஊரடங்கு அவசியமில்லை - ஹைகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்
ஆக்டிவ் கேஸ்கள் அதிகரிப்பு
இங்கு ஏப்ரல் 11-ந் தேதியன்று கொரோனாவுக்கு சிகிச்ச்சை பெறுவோர் எண்ணிக்கை 867 ஆக இருந்தது. ஆனால் 10 நாட்களில் அதாவது ஏப்ரல் 27-ல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்தது.
திடீர் தாக்குதல்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவர்கள், ஜவுன்பூர் மாவட்டத்தில் இருந்து சிகிச்சைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் சொந்த ஊரைவிட்டு வெளியே செல்லாத கிராம மக்களாக இருந்தனர். வெளி உலகத் தொடர்பே இல்லாத இவர்களுக்கு எப்படி இப்படி கொரோனா பாதிப்பு இருந்தது என்பது புரியாததாகத்தான் இருந்தது.
காரணமே இடம்பெயர் தொழிலாளர்கள்
பின்னர் மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில்தான் இதன்பின்னணியே தெரியவந்தது. அதாவது ஹோலி பண்டிகை தொடங்கி தற்போதைய உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தல் வரை அடுத்தடுத்து பிற மாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சுமார் 1 லட்சம் பேர் குறுகிய காலத்திலேயே ஜவுன்பூர் மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தனர்.
காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்
அப்படி வந்து சேர்ந்தவர்கள் கொரோனா பரிசோதனையும் செய்யவில்லை; பிற மாநிலங்களில் இருந்து வந்திருக்கிறோமே என தனிமைப்படுத்திக் கொள்ளவும் இல்லை. வழக்கம் போல சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர். இதன்விளைவுதான் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது என்கின்றனர்.
மருத்துவ கட்டமைப்பு மோசம்
அத்துடன் பொதுவாக உத்தரப்பிரதேசத்தில் மருத்துவ கட்டமைப்பு படுமோசம்தான். அதுவும் ஜவுன்பூர் போன்ற கிராமப்புற உள் மாவட்டங்களின் நிலைமையை சொல்ல வேண்டியதே இல்லை. இதனால்தான் கொரோனாவின் கொடூரத் தாக்குதலை தாக்குபிடிக்காமல் மக்கள் உயிருக்கு போராடுகின்றனர் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.